உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வெள்ள கட்டுப்பாடு வரைபடம் தயாரிப்பு தாமதம் அலட்சியம் காட்டினால் தலைநகருக்கு ஆபத்துதான் மீண்டும் தத்தளிப்பதா?

வெள்ள கட்டுப்பாடு வரைபடம் தயாரிப்பு தாமதம் அலட்சியம் காட்டினால் தலைநகருக்கு ஆபத்துதான் மீண்டும் தத்தளிப்பதா?

சென்னை, சென்னை பெருநகருக்கான வெள்ள கட்டுப்பாடு வரைபடம் தயாரிக்கும் பணிகள் தாமதமாகி உள்ளது. பருவ மழையின்போது மீண்டும் சென்னை தத்தளிக்காமல் இருக்கும் திட்டத்தில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.சென்னை பெருநகரில், முன் எப்போதும் இல்லாத வகையில், 2015ல் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. பொதுவாக நீர் நிலைகளிலும், நீர் வழித்தடங்களிலும் அத்துமீறி குடியிருப்போர்தான் வெள்ளத்தால் பாதிக்கப்படுவர் என்று மக்கள் நினைத்து இருந்தனர். ஆனால், இதற்கு மாறாக, சி.எம்.டி.ஏ., முறையாக அங்கீகரித்த மனைப்பிரிவுகளில், வீடுகள் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மக்களின்இயல்பு வாழ்க்கை சில வாரங்கள் முடங்கின.

அதிகாரிகள் நடவடிக்கை

இந்நிலையில், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களில், புதிதாக கட்டட அனுமதி வழங்குவதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக, அதிகபட்ச வெள்ள மட்டம் பார்த்து, அதற்கு மேல் வீட்டின் தரை மட்டம் இருப்பதை உறுதி செய்யும்படி, கட்டுமான நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டன. பொதுப்பணித்துறை, வருவாய் துறை வழிகாட்டுதல்கள் பெற்று, நில வகைபாடு விதிகளில் மாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில், சென்னை பெருநகருக்காக வெள்ள கட்டுப்பாடு வரைபடம் தயாரிக்கப்படும் என, தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்கான பணிகள், சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டன. சி.எம்.டி.ஏ.,வில் இதற்கான வல்லுநர்களை தேடும் பணி துவங்கியது.அதன்பின், தொழில் பழகுநர் பயிற்சிக்கு வந்த மாணவர்கள் சிலர், இதில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள், பல்வேறு பகுதிகளுக்கு சென்று, கள நிலவர விபரங்களை சேகரித்தனர். ஆனால், பயிற்சிக்காலம் முடிந்து மாணவர்கள் சென்ற நிலையில், வரைபடம் தயாரிப்பு பணிகள் வேகம் எடுக்காமல் முடங்கியுள்ளது. இதுகுறித்து, நகரஅமைப்பு வல்லுநர்கள் கூறியதாவது: சென்னை பெருநகருக்கு வெள்ள கட்டுப்பாடு வரைபடம் தயாரிப்பு மிக மிக அவசியம். சென்னை பெருநகரில் எந்தெந்த பகுதிகளில், அதிகபட்ச வெள்ள பாதிப்பு ஏற்பட்டது என்றதன் அடிப்படையில், கட்டடவிதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.

சிறப்பு குழு வேண்டும்

நில வகைபாடு தகவல்தொகுப்பை அதற்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும். பிரதான நீர் வழித்தடங்களில் ஏற்படுத்தப்படும் தடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.மழைநீர் கால்வாய் கட்டமைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டும்.ஒரு இடத்தில் திடீரென அதிகபட்ச மழை பெய்தால், அதிக அளவு வெள்ள நீரை வெளியேற்றும் அளவுக்கு கால்வாய்களை அமைக்க வேண்டும்.இது போன்ற பணிகளை உள்ளடக்கியதாக, வெள்ள கட்டுப்பாடு வரைபடம் இருக்க வேண்டும். இதற்கான பணிகளுக்கு உயரதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்க, சி.எம்.டி.ஏ., நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கட்டுமான திட்டங்களில், உயரதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை