உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வெளிநபர்களை பணியில் அமர்த்தி அட்டூழியம்; டாஸ்மாக் கடைகளில் தொடரும் விதிமீறல்கள்

வெளிநபர்களை பணியில் அமர்த்தி அட்டூழியம்; டாஸ்மாக் கடைகளில் தொடரும் விதிமீறல்கள்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வருவாய் மாவட்டங்களில், காஞ்சிபுரம் தெற்கில் 95 டாஸ்மாக் கடைகளும், காஞ்சிபுரம் வடக்கில், 110 கடைகளும் இயங்கி வருகின்றன. இங்கு, மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்கள், வெளிநபர்களை பணியில் அமர்த்தி விற்பனை செய்ய மாட்டோம் என்றும், மீறினால், துறைரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் என்றும், உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டு மாவட்ட மேலாளரிடம் கொடுத்துள்ளனர்.ஆனால், அதையும் மீறி, டாஸ்மாக் விதிகளுக்கு புறம்பாக, 90 டாஸ்மாக் கடைகளில், வெளிநபர்கள் சில ஆண்டுகளாகவே பணிபுரிந்து வருகின்றனர்.

குற்றச்சாட்டு

மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை பணியில் இருக்கும் இவர்கள், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.இங்கு, எம்.ஆர்.பி., விலையை விட, கூடுதலாக, 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.இதனால், கடைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு, பல ஆயிரம்ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதை கண்டுகொள்ளாமல் இருக்க, மாவட்ட மேலாளருக்கு, ஒவ்வொரு கடையில் இருந்தும், மாதந்தோறும் லஞ்சம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மாவட்டத்தில், வண்டலுார் 4540, ஊரப்பாக்கம் 4371, 4381, கேளம்பாக்கம் 4527, தையூர் 4399, உத்திரமேரூர் 4538, 4189, கலியனுார் 4375, நத்தப்பேட்டை 4043, திம்மசமுத்திரம் 4408, திருப்புட்குழி 4392, கீழ்கதிர்பூர் 4048 ஆகிய கடைகள் எந்த எம்.ஆர்.பி., ரெய்டுகளிலும் சிக்குவதே இல்லை. ரெய்டு வருவது, இவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்துவிடுகிறது.இந்த கடைகளில் இருந்தும், மாவட்ட மேலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு, பல லட்சம் ரூபாய் லஞ்சமாக, மாதந்தோறும் வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தொடர்ந்து, சென்னை மண்டல டாஸ்மாக் நிர்வாகம், அனைத்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கும், கடந்த 8ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:மாவட்டத்தில், சில மதுபான சில்லரை விற்பனை கடைகளில், வெளிநபர்கள் பணிபுரிவதாக தெரிகிறது.

ஆய்வு

கடைகளில், அதற்கென பணியமர்த்தப்பட்ட மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் தவிர்த்து, வெளிநபர்களை பணியில் ஈடுபடுத்துவது, டாஸ்மாக் விதிகளின்படி கடுமையான குற்றச்செயலாகும்.மதுபான விற்பனை கடைகளில், வெளிநபர்கள் பணிபுரிவதை தடுக்க, மாவட்ட மேலாளர் ஆய்வு செய்ய வேண்டும்.கடைகளில் குறைபாடு கண்டறியும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர் மற்றும் உடன் பணிபுரிந்த விற்பனையாளர் ஆகியோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடைகளில் உயர் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொள்ளும்போது, கடையில் வெளிநபர் பணிபுரிவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளரே முழு பொறுப்பு.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

செங்காட்டூரில் கள்ள மது விற்பனை: காவல் நிலையம் முற்றுகை

செய்யூர் அருகே செங்காட்டூர்கிராமத்தில், நான்கு இடங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாகவும், இதனால் கிராம இளைஞர்கள் மற்றும் ஆண்கள் மதுவிற்கு அடிமையாகி, மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் குடும்பத்தினருடன் தகராறு செய்வதாகவும், பகுதி பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.கள்ளத்தனமாக மது விற்பனை செய்வோர் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேற்று 50க்கும் மேற்பட்ட பெண்கள், செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத பெண் ஒருவர் கூறியதாவது:எங்கள் கிராமத்தில், 24 மணி நேரமும், பல இடங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை நடக்கிறது.கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் ஆண்கள், வேலைக்கு செல்லாமல் காலை முதலே குடித்துவிட்டு, குடும்பத்தினருடன் தகராறு செய்கின்றனர். சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து, ஏராளமானோர் குடிப்பதற்கு எங்கள் கிராமத்திற்கு வந்து செல்கின்றனர்.இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவதால், பல பெண்கள் சிறுவயதிலேயே கணவனை இழந்து தவித்து வருகின்றனர்.ஆகையால், மது பாட்டில்களை பதுக்கி வைத்து, கள்ளத்தனமாக விற்பனை செய்வோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.- -- நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை