| ADDED : பிப் 29, 2024 10:57 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பகுதியில், சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம், மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இதில், உடற்கல்வி பாடவேளையில், பள்ளி விளையாட்டு மைதானத்தில், மாணவர்கள் கால்பந்து, கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.பள்ளி மைதானத்தில், தினந்தோறும் பத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. அவை விளையாடும் மாணவர்களை மிரட்டி விரட்டுகின்றன.கால்நடைகள் உள்ள பகுதிகளுக்கு செல்லும் போது, கால்நடைகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். அதனால், அச்சத்துடன் விளையாடாமலேயே கலைகின்றனர்.பள்ளியைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு இருப்பினும், பள்ளி பாடவேளையில் நுழைவாயில் வழியாகவே கால்நடைகளை ஓட்டி வரும் அப்பகுதிவாசிகள், மைதானத்தில் மாடுகளை விட்டு செல்கின்றனர்.இதை தவிர்க்கும் விதமாக, பள்ளி மைதானத்தை சீரமைத்து, பள்ளிக்கு காவலாளி ஒருவரை பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.