உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தனியார் பள்ளி கட்டடத்திற்கு சீல் தரையில் அமர்ந்து படித்த மாணவர்கள் ஆவேசமடைந்த பெற்றோர் போராட்டம்

தனியார் பள்ளி கட்டடத்திற்கு சீல் தரையில் அமர்ந்து படித்த மாணவர்கள் ஆவேசமடைந்த பெற்றோர் போராட்டம்

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கத்தில், செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி நிர்வாகம் 2018ல் தனியார் நிதி நிறுவனத்தில் 4 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில், கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடன் தொகையை செலுத்தவில்லை.இதையடுத்து, தனியார் நிதி நிறுவனம், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, 'சீல்' வைக்க உத்தரவு பெற்ற நிலையில், பள்ளியின் ஒரு பகுதி மூன்று மாடி கொண்ட அலுவலகம் மற்றும் வகுப்பறை கட்டடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.தற்போது, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும், மார்ச் 1ம் தேதி பொதுத் தேர்வும் நடைபெற உள்ளது.இதையறிந்த மாணவ - மாணவியரின் பெற்றோர், நேற்று முன்தினம் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நேற்று வழக்கம்போல், மாணவ - மாணவியர் பள்ளிக்கு வந்தனர். அங்கு சீல் வைக்கப்பட்ட கட்டடத்தை பயன்படுத்த முடியாததால் போதிய இடவசதி, கழிப்பறை வசதி இல்லாமல், மாணவ - மாணவியர் அவதிப்பட்டனர். இதனால், மாணவர்கள் பள்ளி வளாக வெளிப்புற தரையில் அமர்ந்தனர். மாணவர்களை அழைத்து வந்த பெற்றோர் கல்வி பாதிக்காமல் இருக்க பள்ளி இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பள்ளிக் கல்வித்துறை, காவல் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், மாணவர்களின் பெற்றோரிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் பேச்சு நடத்தினர்.அதன்பின், மதியத்திற்கு மேல் குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களை பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர், நேற்று சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர்.முதற்கட்ட நடவடிக்கையாக, பள்ளிக்கல்வித் துறை சார்பில், தேர்வு மற்றும் மாணவர்களின் நலன் கருதி, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், மூன்று மாதம் வரை கேளம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இதைத் தொடர்ந்து, மற்ற வகுப்பு மாணவர்கள், அதே பள்ளி அல்லது தனியார் வாடகை கட்டடத்தில் கல்வியை தொடர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்