கூவத்துார்: கடலுார் கிராமம் அருகே, சின்னக்குப்பம் பகுதி போக்குவரத்திற்காக, பகிங்ஹாம் கால்வாய் துார்க்கப்பட்டு உள்ளது. அதை அகற்றி பாலம் அமைக்க வேண்டுமென, மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சி, சின்னகுப்பம் பகுதியில், மீனவர்கள் வசிக்கின்றனர். இவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கும், மீன் விற்பனைக்கும், இங்குள்ள பகிங்ஹாம் கால்வாயைக் கடந்தே சென்று வருகின்றனர். அதாவது, சின்னக்குப்பம் மீனவர் பகுதியை, கடலுார் கிராமத்துடன் இணைக்கும் ஊராட்சி ஒன்றிய சாலை, பகிங்ஹாம் கால்வாயில் குறுக்கிடுவதால், இந்த இடத்தில் பாலம் அமைக்க வேண்டியது அவசியம். ஆனால், பாலம் கட்டப்படாததால், மீனவர்கள் பகிங்ஹாம் கால்வாயை மண் கொண்டி துார்த்து கடந்து சென்றனர். இந்த சாலை சேத மடைந்ததால், லத்துார் வட்டார வளர்ச்சி நிர்வாகம் கடந்த 2020ல், புதிய தார்ச்சாலையாக அமைத்தது. கால்வாயில் நீர்போக்கு முக்கியத்துவம் பற்றி கவலைப்படாமல், கால்வாயை முற்றிலும் துார்த்தே சாலை அமைத்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, பொதுப்பணித் துறையினர் இந்த பகுதியில் ஆய்வு செய்தனர். பின், கால்வாய் துார்க்கப்பட்ட இடத்தில் உள்ள மண்ணை அகற்றிவிட்டு, மீனவர் பகுதி இணைப்பிற்காக தற்காலிகமாக குழாய் வைத்து பாலம் அல்லது நிரந்தர உயர்மட்ட பாலம் அமைக்குமாறு, வட்டார வளர்ச்சி நிர்வாகத்திடம் அறிவுறுத்தினர். ஆனால், தற்போது வரை அங்கு பாலம் அமைக்கப்படாமல், கால்வாய் துார்க்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. பொதுப்பணித் துறையினரும், கால்வாய் நிலை குறித்து மீண்டும் ஆய்வு செய்யாமல், அலட்சியமாக உள்ளனர். பாலாற்றை ஒட்டி இந்த பகிங்ஹாம் கால்வாய் உள்ளதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, இந்த இடத்தில் தண்ணீர் செல்ல வழியில்லை. இதனால், மீனவ பகுதியில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, மீனவர் பகுதி இணைப்பு, பகிங்ஹாம் கால்வாயில் தடையற்ற நீர் போக்குவரத்து கருதி, இந்த பகுதியில் பாலம் அமைக்குமாறு, மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.