உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வயலுார் ஏரி மதகை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

வயலுார் ஏரி மதகை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

சித்தாமூர்: வயலுார் ஏரி மதகை பருவமழைக்கு முன் சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். சித்தாமூர் அருகே போந்துார் ஊராட்சிக்கு உட்பட்ட வயலுார் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 120 ஏக்கர் பரப்பளவு பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி வாயிலாக 400க்கும் மேற்பட்ட ஏக்கர் வயல்வெளி நீர்ப்பாசனம் பெறுகிறது. ஏரியின் மதகு பரமரிப்பு இன்றி மூன்று ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது. தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளதால், மழைகாலத்தில் ஏரியில் இருந்து பழுதடைந்த மதகு வழியாக தண்ணீர் வெளியேறுவதால், தண்ணீரை முழுமையாக சேமிக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால் இரண்டு போகம் விவசாயம் செய்த பகுதியில், தற்போது ஒரு போகம் மட்டுமே விவசாயம் செய்யும் நிலை உள்ளது. மேலும் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏரி முழு கொள்ளளவை எட்டினால், மதகு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் வீணாக வாய்ப்பு உள்ளது. ஆகையால் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பருவமழைக்கு முன் பழுதடைந்து உள்ள வயலுார் மதகு பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ