அனந்தமங்கலம் நெற்களம் விவசாயிகளிடம் ஒப்படைப்பு
அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டு, அனந்தமங்கலம் ஊராட்சி உள்ளது. இப்பகுதியில் விவசாயமே பிரதான தொழில். இப்பகுதி விவசாயிகள் நெல், மணிலா, உளுந்து, எள் மற்றும் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.மழைக்காலங்களில் நெல் மற்றும் மணிலா போன்றவற்றை உலர்த்தி, பாதுகாப்பதில் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.அதனால், கதிரடிக்கும் களம் அமைக்க வலியுறுத்தி, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக, துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது.அதன் விளைவாக, தற்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், 2024 - 25ம் நிதி ஆண்டில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 8.80 லட்சம் ரூபாய் மதிப்பில், செல்லியம்மன் கோவில் அருகே, புதிதாக கதிரடிக்கும் களம் அமைக்கப்பட்டது.அதற்கான அனைத்து பணிகளும் முடிந்து, நேற்று விவசாயிகளின் பயன்பாட்டிற்கு, கதிர் அடிக்கும் களம் ஒப்படைக்கப்பட்டது.