குறைந்த மின்னழுத்த பிரச்னை கருங்குழியில் தொடரும் அவதி
மதுராந்தகம்:கருங்குழி பேரூராட்சியில், குறைந்த மின்னழுத்த பிரச்னை காரணமாக, அப்பகுதியில் வசிப்போர் அவதிப்பட்டு வருகின்றனர். கருங்குழி பேரூராட்சியில், 15வது வார்டுக்கு உட்பட்ட படவேட்டம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் தெரு, பச்சையம்மன் கோவில் தெரு உள்ளிட்ட தெருக்களில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குறைந்த மின்னழுத்த பிரச்னை காரணமாக, வீடுகளில் உள்ள மிக்ஸி, கிரைண்டர், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள், அடிக்கடி பழுதாகி வருகின்றன. இதனால், இப்பகுதியில் வசிப்போர் வேதனையில் உள்ளனர். மேலும், படவேட்டம்மன் கோவில் தெருவில், ஆறு லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டது. குறைந்த மின்னழுத்த பிரச்னை காரணமாக இந்த இயந்திரம், திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே பழுதாகி, பயன்பாடின்றி மூடப்பட்டுள்ளது. கருங்குழி மின்வாரிய அலுவலகத்தில், குறைந்த மின்னழுத்த பிரச்னை குறித்து புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கருங்குழி மின்வாரிய அதிகாரிகள், இப்பகுதியில் கூடுதல் மின் மாற்றி அமைத்து, தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்பகுதியில் வசிப்போர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.