உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை கடற்கரைகளில் புதிய மணற்பரப்பு பளிச்

செங்கை கடற்கரைகளில் புதிய மணற்பரப்பு பளிச்

மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், கானத்துார் ரெட்டிகுப்பம் துவங்கி, இடைக்கழிநாடு ஆலம்பரைகுப்பம் வரை, 75 கி.மீ., நீள கடற்கரை பகுதி உள்ளது.வடகிழக்கு பருவமழை காலத்தில், பாலாறு, பகிங்ஹாம் உள்ளிட்ட கால்வாய்களில் பெருக்கெடுக்கும் வெள்ளம், கடலில் கலக்கிறது. அப்போது சுற்றுப்புற பகுதி குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் குவிகின்றன. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சுற்றுலா பகுதி கடலில், மக்களாலும் குப்பை குவித்து சீரழிக்கப்படுகிறது.அவ்வாறு கடலில் சேர்ந்த குப்பை கழிவுகள், அலையில் அவ்வப்போது அடித்துவரப்பட்டு, கடற்கரையில் ஒதுங்கி அலங்கோலமாக காட்சியளிக்கும்.இந்நிலையில், கடலின் நீரோட்டம் மாற்றம் காரணமாக, சில மாதங்களாக கடலரிப்பு அதிகரித்து, கடல்நீர் நிலப்பகுதியில் புகுந்தது. அதனால், கடற்கரை மணற்பரப்பு அரிக்கப்பட்டது.ஆனால், தற்போது நீரோட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதால், கடலில் அரித்துசெல்லப்பட்ட மணல், மீண்டும் கரைக்கு தள்ளப்பட்டு, புதிய மணற்பரப்பு கடற்கரை உருவாகியுள்ளது. புதிதாக உருவான கடற்கரையில், குப்பை கழிவுகள் இன்றி, புதிய மணற்பரப்பு பளிச்சென கவர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !