இருக்கை வசதியுடன் பஸ் நிழற்குடை அச்சிறுபாக்கம் பயணியர் எதிர்பார்ப்பு
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பகுதி சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில், பயணியர் பேருந்து நிறுத்தம் உள்ளது.இதில் சென்னை செல்லும் மார்க்கத்தில், தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் பேருந்து பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டிவனம் உள்ளிட்ட பகுதி பேருந்துகள், இந்த நிறுத்தத்தில் நின்று, பயணியரை ஏற்றிச் சென்றன.தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், வாகன விபத்துக்களும் ஏற்பட்டு, பயணியர் காயமடைந்தனர்.இதையடுத்து, 100 அடி துாரத்தில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, தற்காலிக பயணியர் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது.கோடை வெயில் காரணமாக, பயணியரின் நலன் கருதி, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், தற்காலிகமாக பச்சை நிற துணியால் நிழற்குடை அமைக்கப்பட்டது.இந்த துணி காற்றில் கிழிந்து வீணானதால் அகற்றப்பட்டது.தற்போது நிழற்குடையும் இல்லாமல், உட்கார வசதியின்றியும் உள்ளதால், பள்ளி கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் முதியவர்கள், பெண்கள் ஆகியோர், கடும் வெயிலில் கால்கடுக்க காத்திருந்து, பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், பயணியரின் நலன் கருதி, நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.