| ADDED : நவ 24, 2025 02:53 AM
தாம்பரம்: தஞ்சாவூர், கும்பகோணத்தை சேர்ந்தவர் பிரிதிவிராஜன், 40. உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில், கும்பகோணத்தில் இருந்து, நேற்று காலை தாம்பரத்திற்கு வந்தார். தாம்பரத்தில் இறங்கி, மின்சார ரயில் மூலம் கிண்டிக்கு சென்றார். அங்கு சென்று பார்த்தபோது, ஒரு பையை ரயிலிலேயே தவறவிட்டது தெரியவந்தது. அந்த பையில், 3 லட்சம் ரூபாய், 90,000 ரூபாய் மதிப்புள்ள மடிக்கணினி இருந்தது. பின், இது குறித்து மீனம்பாக்கத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படையில் புகார் தெரிவித்தார். அவர்கள், தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், தாம்பரம் ரயில் நிலையத்தின், 1 - 4வது பிளாட்பாரங்களில், சென்னை கடற்கரையில் இருந்து வந்த மின்சார ரயில்களில் சோதனை நடத்தி, பிரிதிவிராஜன் தவறவிட்ட பையை கண்டுபிடித்து மீட்டனர். பின், பிரிதிவிராஜனை வரவைத்து, அந்த பையை தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு போலீசார் ஒப்படைத்தனர்.