கிராம நிர்வாக அலுவலகத்திற்கு புது கட்டடம் கட்ட கோரிக்கை
செங்கல்பட்டு: திருமணி கிராம நிர்வாக அலுவலக கட்டடம் சேதமடைந்து உள்ளதால், புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு அடுத்த திருமணி ஊராட்சி அரசு பள்ளி அருகில், கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் கீழ் திருமணி, ஜானகிபுரம், மோசிவாக்கம் உள்ளிட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த அலுவலகத்திற்கு பட்டா, சிட்டா, அடங்கல், முதியோர் உதவித்தொகை, ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு விண்ணப்பிக்க, கிராம மக்கள் வந்து செல்கின்றனர். இந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளை கடந்ததால், பல இடங்களில் கான்கிரீட் பூச்சு உதிர்ந்து, சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மழைக்காலத்தில் சுவரில் ஈரம் படிந்து காணப்படுகிறது. இதன் காரணமாக, விண்ணப்பிக்க வரும் கிராம மக்கள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். எனவே, இந்த கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, கிராம நிர்வாக அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.