திம்மாவரத்தில் தேங்கும் கழிவுநீர் குடியிருப்புவாசிகள் கடும் அவதி
மறைமலை நகர்: திம்மாவரத்தில், கழிவுநீருடன் மழைநீர் கலந்து தேங்குவதால், அப்பகுதியில் வசிப்போர் அவதிப்பட்டு வருகின்றனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம், திம்மாவரம் ஊராட்சியில், அன்னை தெரேசா நகர் உள்ளது. இது தாழ்வான பகுதி என்பதால், மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து தெருக்கள் மற்றும் காலிமனைகளில் தேங்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது, இப்பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்குவதால், பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் வசிப்போர் கூறியதாவது: அன்னை தெரேசா நகர் பகுதியில், 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும், புதிதாக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இங்கு வீடுகள் கட்டி குடியேறி வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள காலி மனையில், சிறிய அளவில் குளம் போல தண்ணீர் மற்றும் கழிவுநீர் தேங்கி உள்ளதால், சிரமமாக உள்ளது. இதனால், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து, அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, தெருக்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து தேங்கி உள்ளது. இதனால், நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுநீரை அகற்றவும், முறையாக கழிவுநீரை வெளியேற்றவும், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.