கண்துடைப்பிற்கு சாலை சீரமைப்பு சிங்கபெருமாள்கோவிலில் அதிருப்தி
மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் சாலை, 9 கி.மீ., துாரம் உடையது.இந்த சாலை, திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலையாக உள்ளது.இந்த சாலையை பயன்படுத்தி, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, தங்களின் அடிப்படை தேவைகளுக்காக சென்று வருகின்றனர்.இந்த சாலை சிங்கபெருமாள் கோவில் -- தென்மேல்பாக்கம் இடையே, 500 மீட்டர் துாரம் குறுகலாகவும், சமதளமின்றியும் உள்ளது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். பெரும் விபத்து ஏற்படும் முன், இதை சரிசெய்ய வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக இருந்தது குறித்து, நாளிதழ்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியானது. இதையடுத்து, குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.அந்த சாலையையும் அகலமாக அமைக்காமல், மீண்டும் குறுகலாக அமைக்கப்பட்டது. சாலையில் பள்ளம் இருந்த மற்ற இடங்களில், ஜல்லி கற்கள் மட்டும் கொட்டப்பட்டன. தற்போது, அந்த ஜல்லிகள் பெயர்ந்து, மீண்டும் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.இந்த சாலையில் உள்ள பள்ளங்கள் ஒவ்வொரு முறையும் கண் துடைப்பிற்காகவும், கணக்கு காண்பிக்கவும் மட்டுமே சீரமைக்கப்படுகின்றன.எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்னையில் தலையிட்டு, குறுகலான சாலையை அகலமாக்கி, சாலையில் உள்ள பள்ளங்களை முறையாக சீரமைக்கவும், விபத்து ஏற்படுத்தும் வகையில் சமதளமற்ற நிலையிலுள்ள சாலையை சமன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.