மாமல்லபுரம், : மாமல்லபுரம் பகுதியில் பொழிந்த மூடுபனியில், பனித்திரை சித்திரமாக, சிற்பங்கள் வசீகரித்தன.மாமல்லபுரத்தில், பல்லவர் சிற்பக்கலைச் சின்னங்கள் பயணியரை கவர்கின்றன. சுற்றுலா பயணியர், பொதுவாக, காலை 9:00 மணிக்கு பின், இங்கு வர துவங்கி, மாலை வரை, இயல்பான வானிலைச் சூழலில், சிற்பங்களை கண்டு ரசிப்பர். மார்கழி, தை மாதங்களில், காலையில் பனிப்பொழிவு அதிகரித்து, மூடுபனியாக காணப்படும்.நேற்றும், காலை 6:00 மணிக்கு, பனி பொழிய துவங்கி, 9:30 மணிக்கு பின்னும், கடும் மூடுபனியாக நீடித்தது. அதன் பின், சூரிய வெளிச்சம் வெளிப்பட்டது.மூடுபனி, கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, கலங்கரைவிளக்கம் ஆகியவற்றை திரையிட்டு, ரம்மிய சித்திரமாக காட்சியளித்தன.l மதுராந்தகம், மாண்டூர், கருங்குழி, மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், வழக்கத்துக்கு மாறாக, கடும் பனி பொழிவு காணப்பட்டது. மேலும், கிராமப்புறங்களிலும் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.இந்த பனிமூட்டம் காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி, குறைந்த வேகத்தில் பயணம் மேற்கொண்டனர்.கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில்களும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. திருப்போரூர்
திருப்போரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. ஓ.எம்.ஆர்., சாலை, இ.சி.ஆர்., சாலை, செங்கல்பட்டு சாலை முழுதும் தெரியாதபடி பனி மூட்டம் காணப்பட்டது.இதனால், சாலையை பனி மூட்டம் மறைத்ததால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். காலை 7:00 மணி வரை பனி மூட்டம் காணப்பட்டது.