சூணாம்பேடில் சிறுபாலம் சேதம் சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
சூணாம்பேடு:சூணாம்பேடு பகுதியில், சேதமடைந்துள்ள சிறுபாலத்தை சீரமைக்க வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சூணாம்பேடு ஊராட்சி, பஜார் பகுதியிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இருந்து, மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலைக்குச் செல்லும் சாலை நடுவே, வடிகால்வாயை கடக்கும் சிறுபாலம் உள்ளது.இப்பகுதிவாசிகள் தினமும், இந்த சிறுபாலத்தைக் கடந்து செல்கின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு முன், சிறுபாலத்தின் நடுவே பள்ளம் ஏற்பட்டு, சாலை சேதமடைந்தது. இதை உடனே சீரமைக்காததால், நாளடைவில் பள்ளம் பெரிதாகி, தற்போது விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது.இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், இவ்வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, சேதமடைந்துள்ள இந்த சிறுபாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.