உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காஞ்சிபுரத்தில் தேங்கிக்கிடக்கும் பட்டு சேலைகள் ரூ.110 கோடி! கோ - ஆப்டெக்ஸ் கொள்முதல் செய்ய எதிர்பார்ப்பு

காஞ்சிபுரத்தில் தேங்கிக்கிடக்கும் பட்டு சேலைகள் ரூ.110 கோடி! கோ - ஆப்டெக்ஸ் கொள்முதல் செய்ய எதிர்பார்ப்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கங்களில் விற்பனை குறைந்ததால், 110 கோடி ரூபாய் அளவிற்கு பட்டு சேலைகள் தேக்கமடைந்துள்ளதாக, கைத்தறி சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் பட்டு சேலைகள் 10,000 ரூபாயிலிருந்து, இரண்டு லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன. தற்போது, பட்டு சேலை விற்பனையில் தொடர்ந்து ஏற்படும் மந்தம் காரணமாக, பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் திணறுகின்றன. இதனால் உற்பத்தியை குறைத்துள்ளன. மூன்று சேலைகளை ஒரு மாதத்தில் நெய்ய வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில், தற்போது இரு மாதங்களுக்கு ஒருமுறை தான் பணி வழங்கப்படுவதாக, நெசவாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கூட்டுறவு சங்கங்களின் வாயிலாக ஆண்டுதோறும் 90 - 100 கோடி ரூபாய் வரை பட்டு சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்த ஓராண்டிற்குள்ளாகவே பெரும்பாலான பட்டு சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளைக் கடந்த பட்டு சேலைகள் 65 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. .தற்போது, ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களிலும், ஆயிரக்கணக்கான பட்டு சேலைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து உள்ளதால், அவற்றை தள்ளுபடியில் விற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.இதனால், பட்டு சேலை உற்பத்தியாளர்கள், கைத்தறி சங்கத்தினர் பெருமளவில் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கங்களில் இயக்குனர், தலைவர், துணைத் தலைவர் பதவி இடங்கள், ஆறு மாதங்களுக்கு முன் காலாவதியானதால், அதிகாரிகள் கட்டுப்பாட்டில் கைத்தறி சங்கங்கள் இயங்கி வருகின்றன.இந்த சூழலில் விற்பனையை அதிகரிக்க புதிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருப்பதாக, சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் கவலை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, பட்டு கைத்தறி கூட்டுறவு சங்க முன்னாள் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ஜரிகை மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு காரணமாக, பட்டு சேலைகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால், விலை அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.இதன் காரணமாக விற்பனை குறைந்து, கைத்தறி கூட்டுறவு சங்கங்களில், 110 கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000க்கும் மேற்பட்ட பட்டு சேலைகள் தேக்கமடைந்து உள்ளன.காஞ்சிபுரத்தில், 22 கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில், நான்கு சங்கங்கள் இயங்காததால், 18 சங்கங்கள் மட்டுமே இயங்குகின்றன. இதில், பெரிய கைத்தறி சங்கங்களில் மட்டுமே, 70 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டு சேலைகள் கையிருப்பில் உள்ளன. இவற்றை, அரசு நிறுவனமான கோ - ஆப்டெக்ஸ் கொள்முதல் செய்து, கிளைகள் வாயிலாக விற்பனை செய்ய வேண்டும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும், குறைவான சேலைகளையே கோ - ஆப்டெக்ஸ் கொள்முதல் செய்கிறது. கடந்தாண்டு தீபாவளி சமயத்தில் கொள்முதல் செய்த நிலையில், அதன்பின் கொள்முதல் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.தொழிற்சாலைகளிடம் பேச்சுகோ - ஆப்டெக்ஸ் நிறுவனம், ஆண்டுதோறும் பட்டு சேலைகளை கொள்முதல் செய்து வருகிறது. கடந்தாண்டு கூட, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சேலைகளை, காஞ்சிபுரம் கைத்தறி சங்கங்களிடம் இருந்து கொள்முதல் செய்தனர். பட்டு சேலைகள் விற்பனை செய்ய, ஆண்டுதோறும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அடிக்கடி பட்டு சேலை கண்காட்சி நடத்தி விற்பனை செய்கிறோம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், ஊழியர்களுக்கு பரிசுப்பொருள் வழங்கும்போது, கைகளால் நெய்யப்பட்ட பட்டு சேலைகள், கைத்தறி பொருட்களை வாங்கி வழங்கும்படி, தொழிற்சாலைகளிடம் பேச்சு நடத்தி வருகிறோம்.- கைத்தறித் துறை அதிகாரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ