உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கேட்டதும் உடனே கிடைத்தது மன்னிப்பு நட்சத்திர விடுதி மதுக்கூடங்களுக்கு அனுமதி

கேட்டதும் உடனே கிடைத்தது மன்னிப்பு நட்சத்திர விடுதி மதுக்கூடங்களுக்கு அனுமதி

சென்னை, விதிகளை மீறி செயல்பட்ட மதுக்கூடங்களுக்கு வைக்கப்பட்ட சீல், 'தி பார்க்' உட்பட ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் வேண்டுகோளை ஏற்று, இரண்டே நாட்களில் அகற்றப்பட்டு, செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதிகளில் தங்கும் விருந்தினர்களுக்காக, மதுக்கூடங்கள் அமைத்துக் கொள்ள உரிமம் வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டுக்கு, 25 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மது வகைகளை தமிழக அரசின் 'டாஸ்மாக்' நிறுவனத்திடம் வாங்கலாம். இதுதவிர, மது விலக்கு துறை ஆயத்தீர்வை அனுமதி பெற்று, இறக்குமதி செய்தும், விருந்தினர்களின் விருப்பத்திற்கேற்ப வழங்கலாம். இறக்குமதி மதுவகைகளுக்கு தனியே வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னையில், 'ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், வி.வி.ஏ. ஹோட்டல்ஸ் ரேடிசன் புளு, ஹையத் ரீஜென்சி, தி பார்க்' ஆகிய ஐந்து நட்சத்திர விடுதிகளில் உள்ள மதுக்கூடங்களில் திடீர் ஆய்வு நடந்தது. இதில், விதிக்கு மாறாக வெளிநபர்களை மது அருந்த அனுமதித்தல், மதுபானம் வினியோகம் செய்தல் முதலிய குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதாக, மதுக்கூடங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, அவற்றை உடனடியாக மூட, மது விலக்கு ஆயத்தீர்வை துறை ஆணையர் கார்த்திகா, கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டார். தங்கியுள்ள விருந்தினர்கள் மட்டுமின்றி, வெளிநபர்களும் மது அருந்த, 2013ல் அனுமதி வழங்கப்பட்டது குறித்து நட்சத்திர விடுதிகள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டதாக தெரிகிறது.இந்நிலையில், இரண்டே நாட்களில் இந்த உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டு, ஐந்து ஹோட்டல்களிலும் மதுக்கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவில், 'மதுக்கூடத்தை மூடும்படி பிறப்பித்த உத்தரவு, ஹோட்டல் நிர்வாகத்தினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.உடனே இந்த உத்தரவை அமல்படுத்தும்படி துணை ஆணையர் கேட்டு கொள்ளப்படுகிறார்' என, மது விலக்கு ஆயத்தீர்வை துறை ஆணையரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதே நேரம், மதுக்கூடங்களை மூடும் படி பிறப்பித்த உத்தரவு மீதான விசாரணை விலக்கிக் கொள்ளப்படவில்லை.

என்ன?

சென்னையிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளில் அமைந்துள்ள மதுக்கூடங்களில், அங்கு தங்கி இருப்பவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், வெளியாட்களுக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, கடந்த 3ம் தேதி மதுக்கூட உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆனால், அடுத்த 48 மணி நேரத்திற்குள், உரிமங்கள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் தேவைகள் தொடர்பான விவகாரங்களில் முடிவெடுப்பதில் எல்லையில்லா காலதாமதம் செய்யும் தமிழக அரசு, நட்சத்திர விடுதிகளுக்கு மதுக்கூட உரிமம் வழங்குவதில் மட்டும், இவ்வளவு வேகமும், ஆர்வமும் காட்டியது மர்மமாக உள்ளது. இது குறித்து, அரசு விளக்கம் அளிக்க வேண்டும். - அன்புமணி,பா.ம.க., தலைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ