| ADDED : ஜூன் 01, 2024 12:27 AM
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பயணியருக்கு டிக்கெட் வழங்க புதிய வகை மின்னணு டிக்கெட் கருவி கடந்த பிப்., 28ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 80 சதவீத பேருந்துகளில் புதிய கருவி வாயிலாக டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இக்கருவி வாயிலாக டிக்கெட் மற்றும் வசூல் தொகை விவரங்கள், பணிமனைகள், மண்டல அலுவலகங்கள் மற்றும் கோட்ட அலுவலகங்களுக்கு உடனடியாக தெரியவரும். பயணியர் எண்ணிக்கை, காலி இருக்கைகள் விவரங்களையும் உயர் அதிகாரிகள் உடனடியாக அறிந்து கொள்ள முடியும். இந்த கருவியில் டெபிட், கிரிடிட் கார்டுகள், ஜிபே போன்றவற்றின் வாயிலாக டிக்கெட் பெறும் வசதியும் விரைவில் கொண்டுவரப்பட உள்ளது. ஆனால், இந்த புதிய கருவிகளில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதாக நடத்துனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, நடத்துனர்கள் கூறியதாவது: புதிய வசதிகளுடன் டிக்கெட் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிறது. சார்ஜர் உடனடியாக காலியாகிவிடுகிறது. தொடுதிரை குழப்பத்தால், சில நேரங்களில் கட்டண தொகை மாறி விடுகிறது. இது, குறித்து நிர்வாகத்திடமும் புகார் தெரிவித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'சில கருவிகளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். சார்ஜிங் பிரச்சினையை போக்க, பேருந்துகளிலேயே சார்ஜிங் பாயின்ட்களை அமைத்து வருகிறோம்' என்றனர்.