திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகம், 2010ல் 1,127 ஏக்கர் பரப்பில் துவங்கப்பட்டது. தற்போது, பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் வளாகமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.மிஷ்லின் டயர் தொழிற்சாலை, பிலிப்ஸ் கார்பன், சுந்தரம் க்ளேட்டன், வீல்ஸ் இந்தியா உட்பட மொத்தம், 46 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு கன்டெய்னர் லாரிகள் உட்பட தினசரி, 350 கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இவை தவிர நுாற்றுக்கணக்கான கார், வேன், பேருந்துகளில், தொழிலாளர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.மேற்கண்ட அனைத்து வகை வாகனங்களும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகத்திற்கு வந்து செல்கின்றன.அந்த வாகனங்கள், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலையில் இருந்து கன்னிகைபேர், பெரியபாளையம், தண்டலம் வழியாக தேர்வாய்கண்டிகை வரையிலான 27.4 கி.மீ., சாலையை கடந்து வர வேண்டும்.இடைப்பட்ட சாலையில், வாகன போக்குவரத்தின் குரல்வளையை இறுக்கி பிடிப்பது போன்று பெரியபாளையம் பகுதி அமைந்துள்ளது.பெரியபாளையம் பேருந்து நிலையம், அடுத்ததாக மூன்று சாலை சந்திப்பு, அதற்கு அடுத்து ஆரணி ஆற்று பாலம், இறுதியாக பவானி அம்மன் கோவில் என, நான்கு பிடிகளில் இருந்து கனரக வாகனங்கள் செல்வது சவாலான விஷயமாகவே உள்ளது.குறிப்பாக பெரியபாளையத்தில் உள்ள மூன்று சாலை சந்திப்பில் உள்ள 90 டிகிரி கோண திருப்பத்தில், நீண்ட கன்டெய்னர்களை திருப்ப முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.பெரியபாளையத்தில் ஏற்படும் போக்குவரத்து ஸ்தம்பிப்பால், தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்சாலைகளின் உற்பத்தியும், கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரியபாளையம் போக்குவரத்துக்கு தீர்வு காண புறவழிச்சாலை அமைக்கப்படும் என, தமிழக அரசு தெரிவித்திருந்தது.பெரியபாளையம் பகுதியில், சென்னை மற்றும் திருவள்ளூர் சாலைகள் சந்திக்கும் இடத்தில் இருந்து புறவழிச்சாலை பிரிந்து, வடமதுரை, எல்லாபுரம், மூங்கில்பட்டு, சிற்றைப்பாக்கம் வழியாக ஊத்துக்கோட்டை சாலையில் இணையும் வகையில் திட்டமிடப்பட்டது.அந்த புறவழிச்சாலை, 1,600 மீட்டர் நீளம் உடைய நான்கு வழிச்சாலையாகும். 2014ல் 26 கோடி ரூபாயாக மதிப்பீடு செய்யப்பட்டது.திட்டத்திற்கான நில எடுப்பு பணிகளை, மாநில நெடுஞ்சாலைச் துறையினர் துரிதமாக மேற்கொண்டு வந்த நிலையில், மாநிலம் வசமிருந்த இந்த சாலை 2023 ஜனவரியில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்கு சென்றது. அத்துடன் பெரியபாளையம் புறவழிச்சாலை திட்டமும் கிடப்பில் போனது.தேர்வாய் கண்டிகை சிப்காட் வளாக தொழிற்சாலைகளின் சாலை போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துரித நடவடிக்கை எடுத்து, கிடப்பில் உள்ள பெரியபாளையம் புறவழிச்சாலை திட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, தொழில் முனைவோர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.இந்த பிரச்னை குறித்து, தேர்வாய் கண்டிகை சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை அலுவலர் ஒருவர் கூறியதாவது: பெரியபாளையத்தில் ஏற்படும் போக்குவரத்து சிக்கலால், உரிய நேரத்தில் தொழிலாளர்கள், ஊழியர்கள் வேலைக்கு வர முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் பல சமயங்கள், 30 நிமிடங்கள் காலதாமதமாக ஷிப்ட்' துவங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் உரிய நேரத்தில் உற்பத்தி பொருட்கள் அனுப்ப முடியாமலும், மூலப்பொருட்கள் கிடைக்க பெறாமலும் தவித்து வருகிறோம். இதனால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். மாநிலத்திடம் ஒப்படைப்புபெரியபாளையம் சாலையை, மாநில நெடுஞ்சாலை துறையினரிடம் ஒப்படைப்பதற்கான பணி நடந்து வருகிறது. அடுத்த ஒரு மாத காலத்திற்குள் அந்த சாலை பழையபடி மாநில நெடுஞ்சாலை துறையினர் வசம் ஒப்படைக்கப்படும்.- ரவீந்திர ராவ்திட்ட இயக்குனர், தேசிய நெடுஞ்சாலை ஆணையம்