தனியார் அடுக்குமாடி குடியிருப்பு சாலையில் தண்ணீர் விட்டதால் அவதி
வளசரவாக்கம், ஆழ்வார்திருநகரில், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் சாலையில் குளம் போல் தேங்கியதால், பாதசாரிகள் மற்றும் பேருந்து பயணியர் அவதிப்பட்டனர். வளசரவாக்கம் மண்டலம், 149வது வார்டு ஆழ்வார்திருநகர் ஆற்காடு சாலையில், அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது.இந்த குடியிருப்பில் இருந்த தொட்டிகளை சுத்தம் செய்த தண்ணீர், நேற்று காலை சாலையில் விடப்பட்டது.இந்த தண்ணீர், ஆற்காடு சாலையில் குளம் போல் தேங்கியதால், வானக ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்பட்டனர்.அத்துடன், ஆற்காடு சாலையிலுள்ள பேருந்து நிறுத்தம் அருகே தண்ணீர் தேங்கியதால், பேருந்திற்காக காத்திருந்த பயணியர், தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.எனவே, முறையாக தண்ணீரை வெளியேற்றாமல், பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் தண்ணீரை விட்ட அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதசாரிகள் கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து பாதசாரிகள் கூறுகையில்,'ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதாலும், போதிய நடைபாதை இல்லாததாலும், நெரிசல் மிகுந்த சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது, சாலையில் விடப்பட்ட தண்ணீரால், பாதசாரிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டது' என்றனர்.