சென்னை,வடசென்னை இணை கமிஷனரின் கீழ் தண்டையார்பேட்டை, புளியந்தோப்பு, அயனாவரம், அண்ணா நகர், பூந்தமல்லி, செங்குன்றம், திருவள்ளூர், ரெட்டேரி, அம்பத்துார் என, ஒன்பது ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் உள்ளன.இதில், மூன்று அலுவலகங்களில் மட்டுமே ஆர்.டி.ஓ.,க்கள் உள்ளனர். மற்ற ஆறு அலுவலகங்களை, மூன்று பேர் சேர்ந்து கவனிக்கின்றனர்.தென்சென்னை இணை கமிஷனரின் கீழ் காஞ்சிபுரம், தாம்பரம், செங்கல்பட்டு, குன்றத்துார், கே.கே., நகர், வளசரவாக்கம், மந்தைவெளி, திருவான்மியூர், சோழிங்கநல்லுார், ஸ்ரீபெரும்புதுார், மீனம்பாக்கம் என, 11 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் உள்ளன. இதில், மூன்று அலுவலகத்திற்கு ஆர்.டி.ஓ., உள்ளனர். மீதமுள்ள, எட்டு அலுவலகங்களை, மூன்று பேரும் சேர்ந்து கவனிக்கின்றனர்.ஒவ்வொரு அலுவலகத்திலும், 100க்கும் மேற்பட்ட புதிய வாகனங்கள் பதிவு, 40க்கும் மேற்பட்ட ஓட்டுனர் பழகுனர் உரிமம், 50க்கும் மேற்பட்ட ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது.குறிப்பாக, கே.கே., நகர், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய அலுவலகங்களில், அதிக வாகன பதிவு நடைபெறுகிறது. இதில், 31 சேவைகளை 'ஆன்லைன்' வாயிலாக பெறலாம்.பன்னாட்டு உரிமம், அனுமதி சீட்டு, புதிய வாகனம் பதிவு, பெயர் மாற்றம், பேட்ஜ், தடையின்மை சான்று, நகல் சான்றுகள் உள்ளிட்ட தேவைக்கு, ஆர்.டி.ஓ., முன், நேரடியாக ஆஜராக வேண்டும்.மேலும், வாகன பதிவு தொடர்பான சில விளக்கங்கள், கையெழுத்துகளை ஆர்.டி.ஓ., தான் போட முடியும்.இந்நிலையில், ஒரு ஆர்.டி.ஓ., மூன்று, நான்கு அலுவலகங்களை சேர்த்து பார்க்கும்போது, அவருக்காக பயனாளர்கள், அதிக நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.இதில் வாகனங்கள் ஆய்வு, உயரதிகாரிகள் கூட்டம், இதர பணி தொடர்பாக ஆர்.டி.ஓ., செல்லும் போது, பொதுமக்கள் பல நாட்கள் அலைய வேண்டி உள்ளது.அதேபோல், சட்டவிரோதமாக இயங்கும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.சென்னையில் புதிய வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகுவதுடன், வெளி மாநில வாகனங்களின் புழக்கமும் அதிகரித்து உள்ளது.எந்த வாகனமாக இருந்தாலும், ஆர்.டி.ஓ., அனுமதி தேவை. இதை உணர்ந்து, ஒவ்வொரு அலுவலகங்களிலும் ஆர்.டி.ஓ.,வை நியமிக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.