மணலிபுதுநகர், மணலிபுதுநகர், போலீஸ் ஸ்டேஷன் சாலையில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இங்கு தொடக்கப்பள்ளியில் 600 மாணவ - மாணவியரும், உயர்நிலைப் பள்ளியில் 545 மாணவ - மாணவியரும் படிக்கின்றனர்.இப்பள்ளி, கடந்த 2017ல் தான் நடுநிலைப்பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், ஏழு ஆண்டுகளாக பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டப்படவில்லை.தற்போது, 10 வகுப்பறைகள் கூடுதலாக தேவைப்படுகின்றன. அதேபோல, நான்கு வகுப்பறைகள் தகரஷீட்டால் ஆனது.இடப்பற்றாக்குறை நிலவி வருவதால், ஒரு வகுப்பறையில், 60 - 90 மாணவ - மாணவியர் வரை அமர்ந்து படிக்க வேண்டிய சூழல் உள்ளது.இது குறித்து, பள்ளி நிர்வாகம், மேலாண்மை குழு, பெற்றோர் தரப்பில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.இந்த நிலையில், கூடுதல் கட்டடம் கோரி மாணவ - மாணவியரின் பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் மணலி புதுநகர் - பொன்னேரி நெடுஞ்சாலையில், நேற்று காலை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து மணலி உதவி கமிஷனர் மகிமை வீரன், மணலி புதுநகர் காவல் ஆய்வாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.அதேபோல, 15வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் நந்தினி, பொன்னோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர் ஆகியோர், விரைவில் கட்டடம் கட்ட வேண்டிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறினர்.இதையடுத்து, பெற்றோர் கலைந்து சென்றனர்.