| ADDED : பிப் 25, 2024 12:14 AM
திருவள்ளூர்,திருவள்ளூர் அடுத்த, பூண்டி நீர்த்தேக்க பகுதியான சதுரங்கப்பேட்டை -மோவூர் கிராமத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுலா வளர்ச்சி பணி துவக்க விழா, கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலையில் நேற்று நடந்தது. கைத்தறி துறை அமைச்சர் காந்தி தலைமை வகித்து, சுற்றுலா வளர்ச்சி பணிக்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார். பின் அமைச்சர் காந்தி கூறியதாவது:பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரும் சுற்றுலா பயணியரை கவரும் வகையில் நீர் விளையாட்டு, படகு சவாரி, சாகச விளையாட்டு மற்றும் பறவைகளைக் காண பார்வையாளர் மாடம் போன்ற வசதிகள் கொண்ட சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும்.இப்பகுதியில் படகு குழாம் அமைத்தல் தவிர உணவகம், சமையல் அறை, வரவேற்பு மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய புதிய நிர்வாக கட்டடம், அணுகு சாலை, உட்புற சாலை உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள், 3.33 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜாராம், சுற்றுலா வளர்ச்சிக் கழக உதவி செயற்பொறியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.