செங்கல்பட்டு ரயில் நிலைய மேம்பாடு சோலார் பேனல் அமைக்கும் பணி நிறைவு
செங்கல்பட்டு, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், 'அம்ரித் பாரத்' திட்டத்தில் 22.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.சென்னை புறநகரில், செங்கல்பட்டு ரயில் நிலையம் பிரதானமாகும். இதன் வழியாக, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு, விரைவு ரயில் சென்று வருகின்றன.செங்கல்பட்டு -- சென்னை கடற்கரை மற்றும் அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் நிலைய வளாகத்தில், டிக்கெட் கவுன்டர், முன்பதிவு மையம் ஆகியவை தனியாக உள்ளன.இதனால், பயணியர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, ரயில் நிலைய நடைமேடை பகுதியில் கூரைகள், டிக்கெட் கவுன்டர், முன்பதிவு மையம் உட்பட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென, ரயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய அரசிடம், ரயில் பயணியர், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.இதைத்தொடர்ந்து, 'அம்ரித் பாரத்' திட்டத்தில், 22.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக, 2023 ஜூலை 12ம் தேதி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.இதையடுத்து, இப்பணிகளை ஒப்பந்ததாரர்கள் விரைவாக முடிக்க வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.அதன் பின், ரயில் நிலைய வளாகத்தில் முழுமையாக பணிகள் மேற்கொள்ள, பயணியருக்கு மாற்று பாதை அமைக்கப்பட்டது. அதன் பின் பணிகள் துவங்கி, ரயில் நிலையத்திலுள்ள எட்டு நடைமேடைகளில் கூரை, கூரை மீது 'சோலார் பேனல்' அமைத்தல், தரையில் சிமென்ட் கற்கள் பதித்தல், முதலாவது நடைமேடை, எட்டாவது நடைமேடை பகுதியில், தலா ஒரு மின் துாக்கிகள் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.அத்துடன், நுழைவாயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், டிக்கெட் கவுன்டர் அருகில், வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்தமாக, 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மற்ற பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
'பார்க்கிங்' கட்டணம் அதிகம்
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், பயணியர் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். இங்கு வாகனங்களை நிறுத்த வசதியின்றி, தனியார் வாகன நிறுத்தங்களில் அதிக கட்டணம் கொடுத்து நிறுத்த வேண்டியுள்ளது. ஏற்கனவே தனியார் வாகன நிறுத்தங்களில், 12 மணி நேரத்திற்கு 15 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது 20 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இருந்து கிண்டிக்கு 5 ரூபாய் தான் கட்டணம் உள்ள நிலையில், வாகன நிறுத்த கட்டணம் மிக அதிகமாக உள்ளது. எனவே, ரயில்வே சார்பில் அமைக்கப்படும் வாகன நிறுத்தம், அதிக வாகனங்களை நிறுத்தும் வகையில் இருக்க வேண்டுமென, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.