செம்பரம்பாக்கம் ஏரி ஆபீசுக்கு தொடர்பு எண் தேவை
குன்றத்துார்:சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவும், 24 அடி ஆழமும் கொண்டது.இந்த ஏரியின் பராமரிப்பு அலுவலகம், செம்பரம்பாக்கம் ஏரி கரை அருகே அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு என, தனியாக தொடர்பு எண் இல்லை.அலுவலகத்தின் நுழைவுவாயில் எப்போதும் பூட்டியே கிடக்கிறது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் ஏரி குறித்து புகார் அளிக்க முடியாத நிலை உள்ளது.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:செம்பரம்பாக்கம் ஏரி கரை உடைந்தால், மீட்பு பணியை எப்படி மேற்கொள்வது என, அரசு சார்பில் அன்மையில் விழிப்புணர்வு ஒத்திகை நடந்தது.ஆனால், பொதுமக்கள் ஏரி குறித்து புகார் அளிக்க, எந்த தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்படவில்லை.ஏரியில் கழிவு நீர் கலப்பது, கரை சேதம் குறித்து, பொதுமக்கள் செம்பரம்பாக்கம் ஏரி பராமரிப்பு அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொள்ள முடிவதில்லை.எனவே, தொடர்பு எண் வசதியை ஏற்படுத்தி, ஏரி கரை பகுதியில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.