மின்சாரம் பாய்ந்து பசு, நாய் பலி
அமைந்தகரை :அண்ணா நகர் மண்டலம், 107வது வார்டில் அமைந்தகரை ராமசாமி ராஜா தெரு உள்ளது. அண்ணா வளைவு எதிரில் உள்ள இச்சாலையில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணியை, சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.இதற்காக, நேற்று முன்தினம், முத்துமாரியம்மன் கோவில் தெரு மற்றும் பாரிஜாதம்மாள் தெரு சந்திப்பில் பழைய சிமென்ட் சாலையை உடைத்து அகற்றும் பணிகள் நடந்தன. இதற்காக, 'பொக்லைன்' இயந்திரத்தால் சாலையை தோண்டி எடுக்கும்போது, குடியிருப்புகளுக்கு வினியோகிக்கப்படும் உயரழுத்த மின்வடம் சேதமடைந்துள்ளது.இதை முறையாக சீரமைக்காமல், இரவு மணலை மூடிவிட்டுச் சென்றதாக தெரிகிறது. பின், இரவு கொட்டித் தீர்த்த மழையால், இச்சாலையின் தரையில் ஈரமாக இருந்ததால் மின்கசிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை 5:00 மணியளவில், இச்சாலையோரத்தில் சென்ற பசுமாட்டின்மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளது.அதேபோல, அவ்வழியாக வந்த தெருநாய் ஒன்றும் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த குடியிருப்புவாசிகள், மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மின்வாரியத்தினர், மின் இணைப்பை துண்டித்து, இறந்து கிடந்த மாடு மற்றும் நாயை அகற்றினர்.