ஏரி உபரிநீர் கால்வாய் பணி ஜவ்வு மூவரசம்பட்டில் வெள்ள அபாயம்
சென்னை:மடிப்பாக்கம் அடுத்த மூவரசம்பட்டு ஏரி 70 ஏக்கர் பரப்பளவு உடையது. ஆக்கிரமிப்புகள் காரணமாக, 20 ஏக்கராக சுருங்கியுள்ளது.நீர்வளத்துறையின் முறையான பராமரிப்பின்மை காரணமாக, திரிசூலம் பகுதியில் இருந்து ஏரிக்கு வரும் மழைநீர் கால்வாயும், ஏரியில் இருந்து உபரிநீர், மடிப்பாக்கம் பெரிய ஏரிக்கு செல்லும் 40 அடி கால்வாயும் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.இதை, நீர்வளத் துறையால் மீட்க முடியவில்லை. அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மூவரசம்பட்டு ஏரி, வடகிழக்கு பருவமழை காலத்தில் நிரம்பி வழிகிறது. அதில் இருந்து வெள்ளநீர், மூவரசம்பட்டு சுற்றுப்பகுதிகளை மட்டுமின்றி, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அன்புநகர், ருக்மணி அம்மன் தெரு, திருவள்ளுவர் தெருவையும் பாதிக்கிறது.ஆண்டுதோறும் மழைக்காலத்தில் மக்கள் அவதி தொடர்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மூவரசம்பட்டு ஏரியில் இருந்து மடிப்பாக்கம் வரை 940 மீட்டர் கால்வாய் அமைப்பதற்கு, நீர்வளத்துறை முடிவு செய்தது.இதற்காக, 34 கோடி ரூபாயை அரசிடம் கேட்டு பெற்றது. இந்த நிதியில் கால்வாய் அமைக்கும் பணிகள் மார்ச் 7ல் துவங்கப்பட்டது.ஓராண்டில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், ஏழு மாதங்கள் கடந்தும் 25 சதவீத பணிகள் கூட நிறைவு பெறவில்லை.ஆமை வேகத்தில் பணிகள் நடப்பதால், நடப்பாண்டும் மூவரசம்பட்டு ஏரியால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.