| ADDED : ஜன 19, 2024 12:28 AM
சென்னை, 'பறவைகள் சரணாலயமாக உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், குப்பை கிடங்கையும் அகற்றி அதன் அசல் பரப்பை மீட்டெடுக்க வேண்டும்' என, வழக்கறிஞர் மேகநாதன் என்பவர், பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் முன் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிறப்பித்த உத்தரவு:தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவின்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கெடுப்பு முடிந்திருக்க வேண்டும். ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் நில அளவைத் துறை கணக்கெடுப்பை துவங்கவில்லை. இதை செயல்படுத்துவதில் சிரமம் உள்ளதா என்பதை கண்டறிய சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்ல விரும்புகிறோம்.பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இதுவரை மீட்கப்பட்ட சதுப்பு நிலம் குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை அளிக்க வேண்டும். நிலம் மீட்கப்படும் போது, அதை சதுப்பு நிலமாக பராமரிக்க வளத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.பள்ளிக்கரணை பகுதியில் நீரின் தரம் குறித்து குடிநீர் வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை வரும் 22க்கு ஒத்தி வைத்தனர்.