அறிவிக்கப்படாத மின்தடையால் துாக்கம் இழந்த கானத்துார்வாசிகள்
கானத்துார், கானத்துார் கோபிகம்மாள் நகர், ராஜன் தெரு, குப்பம் சாலை உள்ளிட்ட பகுதிகளில், 1,200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்கு, ஒரு மாதமாக அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது. இதனால், பகுதிவாசிகள் புழுக்கத்தில் சிரமப்படுகின்றனர்.குறிப்பாக, நள்ளிரவு 3:00 மணி நேரம் வரை மின்தடை நீடிப்பதால், துாக்கம் இல்லாமல் பரிதவிக்கின்றனர்.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:பகல், இரவில் எப்போது மின்தடை ஏற்படும் என தெரியாது. திடீர் மின்தடை ஏற்படும்போது, 3 முதல் 5 மணி நேரம் வரை நீடிக்கிறது.இதனால், மோட்டார் பயன்படுத்த முடியாமல், ஆழ்துளை கிணறு தண்ணீர் கிடைக்காததால் வேலைக்கு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.இரவில் துாக்கம் இல்லாமல், குழந்தைகள், முதியோர், நோய் பாதிப்புக்கு உள்ளானோர் கடுமையாக சிரமப்படுகின்றனர்.மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், மிகவும் சேதமடைந்துள்ள மின் கம்பிகள் அடிக்கடி அறுந்து விழுவதாக கூறுகின்றனர். எனவே, சீரான மின் வினியோகம் வழங்க, மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.