உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சின்னம்மன் கோவில் குறுக்கு தெருவில் சாலை அமைக்க பகுதிவாசிகள் எதிர்ப்பு

சின்னம்மன் கோவில் குறுக்கு தெருவில் சாலை அமைக்க பகுதிவாசிகள் எதிர்ப்பு

ஆவடி, ஆவடி மாநகராட்சி, 34வது வார்டு, ஜீவா நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள சின்னம்மன் கோவில் குறுக்கு தெருவில், அ.தி.மு.க., ஆட்சியில் சிமெண்ட் சாலை போடப்பட்டது. இந்த சாலை ஒட்டி, எஸ்.என். தெரு, ராமானுஜம் தெரு, பிள்ளையார் கோவில் தெரு உட்பட 6 குறுக்கு தெருக்கள் உள்ளன. இந்த குறுக்கு தெருக்களில் 20 ஆண்டுகள் ஆகியும் சிமென்ட் சாலை அமைக்காமல் மண் தரையாக காட்சியளிக்கிறது. இங்கு சாலை அமைக்க வேண்டும் என பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், 250 மீ., துாரமுள்ள சின்னம்மன் கோவில் குறுக்கு தெருவில், பல இடங்களில் பாதாள சாக்கடை இணைப்பு கொடுப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு சரியாக சீரமைக்காமல் உள்ளது. இதனால், சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதையடுத்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பழைய சாலையை சுரண்டி புது சாலை அமைக்கும் பணி துவங்கி உள்ளது. இன்னும் சாலை வசதி ஏற்படுத்தாத தெருக்களில் சாலை அமைக்காமல், நன்றாக உள்ள சின்னம்மன் குறுக்கு தெருவை சுரண்டி சாலை போடுவதற்கு பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கவுன்சிலரிடம் கேட்டபோது, 'விடுபட்ட இடங்களில் விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.இது குறித்து பகுதிவாசிகள் கூறியதாவது :ஜீவா நகர், எஸ்.என். தெருவில் பல ஆண்டுகளாக சாலை அமைக்கவில்லை. ஆனால் சின்னம்மன் கோவில் குறுக்கு தெருவில் புதிதாக சாலை அமைக்கப்பட உள்ளது. விடுபட்ட குறுக்கு தெருக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு, சின்னம்மன் கோவில் தெருவில் சாலை அமைக்க ஏற்பாடு நடக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், பாதாள சாக்கடை பணிக்காக சேதம் செய்யப்பட்ட சாலையை சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களிடம் பணம் வசூலித்து சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை