பட்டப்பகலில் வீடு புகுந்து 38 சவரன் திருடியவர் கைது
சென்னை, சூளைமேடு, கில் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன், 35; சென்னை விமான நிலைய ஊழியர். கடந்த 15ம் தேதி காலை 10:30 மணியளவில், குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக சென்றார்.பிற்பகல் 3:30 மணியளவில் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டை உடைத்து, 38 சவரன் நகை, 20,000 ரூபாயை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.இது குறித்து சூளைமேடு போலீசார் விசாரித்தனர். இதில், மேற்கு தாம்பரம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த விக்னேஷ், 22, என்பதும், திருடிய நகையை தாம்பரம் ரயில்வே தண்டவாள பகுதியில் குழிதோண்டி புதைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது.நேற்று அவரை கைது செய்த போலீசார், 35 சவரன் நகைகளை மீட்டனர். மீதமுள்ள நகைகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.