சென்னை: இரவு நேர வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார், வெள்ளி, சனி, ஞாயிறு என, மூன்று நாட்கள் மட்டும், அனைத்து வகையான விதிமீறல்களையும் கண்டறிந்து, அபராதம் விதிக்கலாம் என, போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர். சென்னையில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார், இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டிப்பிடிக்காத குறையாக, அபராதம் விதித்தனர். போலீசார் பாடம்
ஏதோ, கொள்ளை கூட்டம் போல அவர்கள் செயல்பட்டதால், சென்னை நகர மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து, 'அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும்; மற்ற விதிமீறல்களை கண்டு கொள்ள வேண்டாம்' என, சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டு இருந்தார். இதனால், வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதை தவிர்த்து, அவர்களுக்கு சாலை விதிமீறல்கள் குறித்து, போலீசார் பாடம் நடத்தி வந்தனர். இந்நிலையில், அபராதம் என்ற ஆயுதத்தை மீண்டும் கையில் எடுக்க, டிராபிக் போலீசாருக்கு, காவல் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து, காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிப்பது குறைக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பலரும் சாலை விதிகளை பற்றி கண்டு கொள்ளாமல் இஷ்டம்போல் செல்கின்றனர். இது, விபத்துக்கள் ஏற்பட காரணமாகி விடுகிறது. எனவே, இரவு நேர சோதனை செய்யும் போலீசார், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் சிறப்பு கவனம் செலுத்த, உத்தரவிடப்பட்டு உள்ளது. அச்சம் ஏற்படும்
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர், அதிவேகமாக வாகனம் ஓட்டுவோர், அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்துவோர் உட்பட, அனைத்து வகையான விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கும், அபராதம் விதிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. விடுமுறை நாட்களில் ஏற்படும் விபத்தை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை. மூன்று நாட்கள் மேற்கொள்ளப்படும் அபராத நடவடிக்கையால், வாகன ஓட்டிகளிடம் ஒருவித அச்சம் ஏற்படும். சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.