உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாதாள சாக்கடை குழியில் சிறுவர்கள் அடுத்தடுத்து விழுவதால் பீதி

பாதாள சாக்கடை குழியில் சிறுவர்கள் அடுத்தடுத்து விழுவதால் பீதி

கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டையில், பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்த 3 வயது சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கடந்த வாரமும், இதேபோல் 3 வயது சிறுமி, குழிக்குள் விழுந்து மீட்கப்பட்டார். கொருக்குப்பேட்டை, சிகிரந்தபாளையம், இரண்டாவது தெருவில், பாதாள சாக்கடை திட்ட பணிகள் நான்கு மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் சாலை மோசமடைந்து, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இப்பிரச்னையை தீர்க்க கோரி, அப்பகுதி மக்கள் பல முறை தெரிவித்தும், மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக, பாதாள சாக்கடை இயந்திர நுழைவு குழியில் மூடியைகூட பொருத்தவில்லை. இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழைநீர், இத்தெருவில் ஆங்காங்கே தேங்கி நின்றது. இயந்திர நுழைவு குழியையும் சூழ்ந்திருந்தது. இதையறியாத 3 வயது சிறுவன், இரு நாட்களுக்கு முன் அவ்வழியே செல்லும்போது கால் இடறி அந்த குழியில் தவறி விழுந்தான். உடன் வந்த தாய், உடனே சுதாரித்ததால், சிறுவன் மீட்கப்பட்டான். கடந்த வாரமும், இதே பகுதியில் 3 வயது சிறுமி, பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்து, அங்கிருந்தோரால் மீட்கப்பட்டது. பாதாள சாக்கடை குழியில் சிறுவன் விழுந்ததற்கு மாநகராட்சி அதிகாரிகளே முழு பொறுப்பு. இப்பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் அபாயகரமாக இருப்பதால், சுகாதார சீர்கேடும், உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. பருவமழை தீவிரமடையும் முன், இப்பிரச்னைக்கு அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை