| ADDED : ஜன 26, 2024 12:38 AM
அரும்பாக்கம், அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட 106வது வார்டில், சூளைமேடு அருகில் கால்வாய் செல்கிறது. நெற்குன்றத்தில் துவங்கும் இக்கால்வாய், அரும்பாக்கம், சூளைமேடு வழியாக, அமைந்தகரை கூவத்தில் கலக்கிறது.விருகம்பாக்கத்தில் 4 கி.மீ., செல்லும் இக்கால்வாய் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. காய்வாய் முழுதும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளன. சூளைமேடு கண்ணகி தெருவில் இருந்து எம்.எம்.டி.ஏ., காலனிக்கு செல்லும் பாதையில், இருசக்கர வாகனம் மட்டும் செல்லும் வகையில் இணைப்பு பாலம் உள்ளது.இங்கிருந்து, எம்.எம்.டி.ஏ., காலனி, அரும்பாக்கம், வடபழனி போன்ற பகுதிகளுக்கு செல்லும் ஆயிரக்கணக்கானோர், தினமும் இதை பயன்படுத்துகின்றனர். இணைப்பு பாலத்தின் சுவர் பல ஆண்டுகளாகவே சேதமடைந்து, விபத்து அபாயத்தில் உள்ளது. தற்போது, நுழைவாயில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து, வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகிறது. 'பெரிய விபத்துகள் ஏற்படும் முன் சேதமடைந்த சுவரை அகற்றி, புதிய சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையெனில் பாதையை மூட வேண்டும்' என, இப்பகுதியினர் கூறினர்.