உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சதுப்பு நிலத்தை அளவிடும் பணி 99 சதவீதம் நிறைவு: அரசு தகவல்

 சதுப்பு நிலத்தை அளவிடும் பணி 99 சதவீதம் நிறைவு: அரசு தகவல்

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை துல்லியமாக செயற்கைக்கோள் உதவியுடன் அளவிடும் பணிகள், 99 சதவீதம் நிறைவு பெற்று உள்ளன என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. 'ராம்சார்' தளமாக அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், விதிகளை மீறி பன்னடுக்கு குடியிருப்புகள் கட்ட, 'பிரிகேட்' என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி, அ.தி.மு.க., சென்னை புறநகர் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலர் பிரெஷ்நேவ் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சதுப்பு நிலத்தின் எல்லையை துல்லியமாக செயற்கைக்கோள் உதவியுடன் அளவிடும் பணியை விரைவுபடுத்த வேண் டும். அதுவரை, சம்பந்தப்பட்ட சதுப்பு நில பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் எந்த பணியையும் மேற்கொள்ளக்கூடாது' என, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த மனு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், 'உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை, செயற்கைக்கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணிகள், 99 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டன . இது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்' என்றார். அப்போது, தமிழக சதுப்பு நில ஆணையம் தரப்பில், 'டிஜிட்டல் முறையில் சதுப்பு நிலத்தின் எல்லையை வரையறுக்கும் பணிகள் நடந்து வருகின்றன' என கூறப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை, டிச., 11ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில், தனியார் கட்டுமான நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்ற இடைக்கால தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ