உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ராயபுரம் போஜராஜன் நகர் சுரங்கப்பாதை திறப்பு வடசென்னை மக்கள் மகிழ்ச்சி

ராயபுரம் போஜராஜன் நகர் சுரங்கப்பாதை திறப்பு வடசென்னை மக்கள் மகிழ்ச்சி

வண்ணாரப்பேட்டைவடசென்னையில் 14 ஆண்டுகளாக இழுபறியாக நடந்து வந்த போஜராஜன் நகர் சுரங்கப்பாதை பணி முடிந்ததை அடுத்து, துணை முதல்வர் உதயநிதி, நேற்று திறந்து வைத்தார். சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில், கண்ணன் தெருவிற்கும், மின்ட் மார்டன் சிட்டிக்கும் இடையே, கொருக்குப்பேட்டை ரயில்வே தண்டவாளம் செல்கிறது. சென்ட்ரலில் இருந்து டில்லி உட்பட பல பகுதிகளுக்கு செல்லும் விரைவு ரயில்கள், மின்சார ரயில்கள், சரக்கு ரயில்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட ரயில்கள், தினமும் இந்த வழியாக செல்கின்றன. இதனால், அரை மணி நேரத்திற்கு ஒருமுறை, ரயில்வே 'கேட்' மூடப்படுவதால், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால், போஜராஜன் நகர் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என, தி.மு.க., ஆட்சியில் 2010ல் அறிவிக்கப்பட்டது. 2016ல் பணி துவங்கி சமீபத்தில் முடிந்தது. மொத்தம் 30 கோடி ரூபாயில் 207 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையை, மக்கள் பயன்பாட்டிற்கு, துணை முதல்வர் உதயநிதி நேற்று திறந்து வைத்தார். அவருடன், அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராயபுரம் 'ஐட்ரீம்' மூர்த்தி, ஆர்.கே.நகர் எபினேசர், பெரம்பூர் ஆர்.டி.சேகர், மேயர் பிரியா, மண்டல குழு தலைவர்கள் நேதாஜி கணேசன், ஸ்ரீராமலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளதால், மின்ட் மாடர்ன் சிட்டி, போஜராஜன் நகர், சீனிவாசபுரம், கண்ணன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. இன்னல்களுக்கு தீர்வு போஜராஜன் நகர் சுரங்கப்பாதை, தி.மு.க., ஆட்சி காலத்தில் துவக்கப்பட்ட திட்டம். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த ஜெயகுமார், மக்கள் பிரச்னையை கண்டுகொள்ளவில்லை. தி.மு.க.,விற்கு நல்ல பெயர் கிடைக்கும் என்பதால், கிடப்பில் போட்டு வேடிக்கை பார்த்தார். நான் எம்.எல்.ஏ.,வாக பொறுப்பேற்றபின், 300 முறைக்கு மேல், போஜராஜன் நகர் சுரங்கப்பாதை பணிகளை ஆய்வு செய்து, துரிதகதியில் பணிகளை முடித்துள்ளேன். மக்களின் இன்னல்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது. - 'ஐட்ரீம்' மூர்த்தி, தி.மு.க., - எம்.எல்.ஏ., ராயபுரம்

ஒக்கியம் மடு மறுசீரமைப்பு

சோழிங்கநல்லுார் மண்டலம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டிய, ஓ.எம்.ஆர்., ஒக்கியம்மடு வழியாக, 62 ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் பாய்ந்து செல்கிறது. இந்த மடு பகுதி, 2.6 கி.மீ., நீளத்தில், 120 முதல் 200 மீட்டர் அகலம் வரை மாறுபட்ட அளவுகளில் உள்ளது. இதனால், கால்வாயை சீராக அமைத்து, மறு சீரமைப்புக்காக, 27 கோடி ரூபாய் ஒதுக்கி, பணி நடந்து வருகிறது. இந்த பணியை, நேற்று பார்வயிட்ட துணை முதல்வர் உதயநிதி, பணியின் தன்மை குறித்து கேட்டறிந்தார். மேலும், பள்ளிக் கரணை, நாராயணபுரம் ஏரி, கீழ்க்கட்டளை ஏரி மற்றும் கோவிலம்பாக்கம் நீர்வழி பாதை களில் நடக்கும் மேம்பாட்டு பணிகளையும் பார்வையிட்டு, அதன் விபரங்களை கேட்டறிந்தார். 'தென்சென்னை சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில், ஒக்கியம் மடு உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, செப்., 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்' என, அப் போது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை