பொது இடத்தில் உச்சா போனதை தட்டிக்கேட்ட எஸ்.எஸ்.ஐ.,க்கு அடி இருவர் கைது
பிராட்வே, :பொது இடத்தில் சிறுநீர் கழித்து அட்டகாசத்தில் ஈடுபட்டு, தட்டிக்கேட்ட போலீஸ் சிறப்பு எஸ்.ஐ.,யை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர். எஸ்பிளனேடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செண்பகராஜா, 50, தலைமையிலான போலீசார், நேற்று பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மக்கள் அதிகமாக கூடும் பகுதியான அங்கு, மர்மநபர் ஒருவர் சிறுநீர் கழித்து, ஆபாசமான முறையில் நடந்து கொண்டார். இது குறித்து, சிறப்பு உதவி ஆய்வாளர் செண்பகராஜா, அந்த நபரிடம் தட்டிக்கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றார். மேலும், கொலை மிரட்டல் விடுத்து சென்றார். சிறிது நேரம் கழித்து, அந்த நபர் தன் நண்பருடன் மீண்டும் வந்து, சிறப்பு உதவி ஆய்வாளர் செண்பகராஜாவிடம் தகராறு செய்து தாக்கினர். சக போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது, இருவரும் தப்பி ஓடினர். இது குறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட பிராட்வேயைச் சேர்ந்த பீர் அனிப், 31, ராயபுரத்தைச் சேர்ந்த லுக்மான், 22, ஆகியோரை கைது செய்ததனர். கைது செய்யப்பட்ட பீர் அனிப் மீது திருட்டு, அடிதடி உட்பட நான்கு வழக்குகள் உள்ளன. விசாரணைக்கு பின், இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். சென்னையில் வட்டி கும்பலுடன் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட சிறப்பு எஸ்.ஐ., ராஜாராமன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் எஸ்.எஸ்.ஐ., ஒருவர் தாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.