| ADDED : நவ 19, 2025 04:14 AM
ஆலந்தூர்: பாதாள சாக்கடை குழாய் உடைப்பு காரணமாக உள்வாங்கிய சாலையில் சிக்கிய குடிநீர் லாரி, பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மீட்கப்பட்டது. ஆதம்பாக்கம், மஸ்தான் கோரி தெருவில் உள்ள குடிநீர் வாரிய நீரேற்று நிலையத்தில் இருந்து, நேற்று தண்ணீர் நிரப்பிய லாரி ஒன்று புறப்பட்டது. மஸ்தான் கோரி தெரு,- பழண்டியம்மன் கோவில் தெரு சந்திப்பு பகுதியில் லாரி சென்றபோது, சாலை திடீரென உள்வாங்கியது. அதில், லாரியின் பின் பக்க டயர்கள் சிக்கின. இதையடுத்து, லாரி ஒரு பக்கமாக கவிழ்ந்து கொண்டே சென்றது. இதைக்கண்ட ஓட்டுநர், கீழே குதித்து தப்பினார். சாலையின் ஓரம் லாரி சிக்கியதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. தகவல் அறிந்து, ஆலந்துார் குடிநீர் வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து, பள்ளத்தில் சிக்கிய குடிநீர் லாரியை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக மீட்டனர். பின், பள்ளத்தை சுற்றி தடுப்பு அமைத்தனர். பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு காரணமாக சாலை உள்வாங்கியதாகவும், அதை சீரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.