உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேளச்சேரி ஏரியை துார்வாராதது ஏன்? அடையாறு கவுன்சிலர்கள் அதிருப்தி

வேளச்சேரி ஏரியை துார்வாராதது ஏன்? அடையாறு கவுன்சிலர்கள் அதிருப்தி

அடையாறு: ஏன் என்ற கேள்விக்கு, பதில் கூற அதிகாரிகள் இல்லாததால் கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்தனர். அடையாறு மண்டல குழு, 38வது கூட்டம், மண்டல அதிகாரி ஆர்டின் முன்னிலையில், மண்டல தலைவர் துரைராஜ் தலைமையில் நடந்தது. இதில், மாநகராட்சி, குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கவுன்சிலர்கள் பேசியதாவது: மோகன்குமார், தி.மு.க., 168வது வார்டு: அடையாறு ஆற்றை ஒட்டிய கிண்டி பகுதியில், வடிகால்வாய்களை துார்வார வேண்டும். சாலையோரம் இருக்கும் குப்பை தொட்டிகளை ஒழுங்குபடுத்த வேண்டும். கதிர்முருகன், அ.தி.மு.க., 170வது வார்டு: கவுன்சிலர் நிதி ஒதுக்கியும், தெரு பெயர் பலகை, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பணிகள் இன்னும் துவங்கவில்லை. சேதமடைந்த வடிகால்வாய் மூடிகளை புதுப்பிக்காததால் விபத்துகள் நடக்கின்றன. கீதா, தி.மு.க., 171வது வார்டு: கோவிந்தசாமி நகரில் தடுப்பு சுவர் கட்டுவது காலதாமதம் ஏற்படுகிறது. சீனிவாசபுரம் லுாப் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். சுபாஷினி, காங்கிரஸ், 173வது வார்டு: அடையாறு, அண்ணா தெரு, வள்ளுவர் தெருவில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அடையாறு காந்தி நகரில் குழாய் பதித்த பள்ளத்தை சீரமைக்கவில்லை. மகேஸ்வரி, தி.மு.க., 175வது வார்டு: வேளச்சேரி ஏரியில் மேம்பாட்டு பணியை விட, துார் வாருவது மிகவும் அவசியம். அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனந்தம், தி.மு.க., 176வது வார்டு: பல தெருக்களில் விபத்துகள் தொடர்வதால், வேகத்தடை அமைப்பதுடன், மிகவும் மோசமான, 21 தெருக்களில் சாலையை புதுப்பிக்க வேண்டும். மணிமாறன், தி.மு.க., 177வது வார்டு: வேளச்சேரியில் முடிந்த பணிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 7 கோடி ரூபாயில் துவக்கப்பட்ட மண்டபம் கட்டுமானப் பணி, பாதியில் நிறுத்தப்பட்டது. அதில் ஏற்பட்ட இடையூறுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஸ்கரன், தி.மு.க., 178வது வார்டு: சாலை, வடிகால்வாய் ஒப்பந்தம் விட்டும், பணி ஒதுக்கீடு வழங்குவதில் காலதாமதம் ஆவதால், பருவமழையின் போது மக்கள் மிகவும் சிரமப்படுவர். ரேஷன் கடை பிரச்னைக்கு பதில் கூற அதிகாரிகள் ஏன் வரவில்லை. விசாலாட்சி, தி.மு.க., 180வது வார்டு: திருவான்மியூரில் அமைக்கப்பட்ட புதிய சாலைகள், ஓரிரு நாட்களிலேயே மின் கேபிள் பதிக்க பள்ளம் எடுத்து நாசப்படுத்தப்படுகின்றன. இதற்கு, அந்தந்த துறை அதிகாரிகள் பதில் கூறினர். வேளச்சேரி ஏரியை துார்வாருவது உள்ளிட்ட சில கேள்விகளுக்கு பதில் கூற அதிகாரிகள் இல்லாததால், கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க., கவுன்சிலர்

கடந்த ஜனவரி மாத மண்டல கூட்டத்தில், 177வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மணிமாறன் ஒருமையில் பேசியதால் பிரச்னை ஏற்பட்டது. அதன்பின், ஆறு கூட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை. வேளச்சேரி பகுதி பிரச்னைகள், கூட்டத்தில் எதிரொலிக்காததால் வார்டு மக்கள், கவுன்சிலர் மீது அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து, நம் நாளிதழில் சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று நடந்த கூட்டத்தில், கவுன்சிலர் மணிமாறன் பங்கேற்று, 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிகாரியிடம் வழங்கி, வார்டு பிரச்னைகள் குறித்து பேசினார். அப்போது, 'நான் வார்டு மக்களை புறக்கணிக்கவில்லை. நான் கூட்டத்திற்கு வராதது குறித்து, தினமலர் நாளிதழில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனால், நான் கூட்டத்தில் பங்கேற்றேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை