உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொங்கல் பரிசு தொகுப்பில் பானை, அடுப்பு சேர்க்கப்படுமா

பொங்கல் பரிசு தொகுப்பில் பானை, அடுப்பு சேர்க்கப்படுமா

சென்னை; ''தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் மண்பானை, அடுப்பை சேர்க்க வேண்டும்,'' என, தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் குலாலர் சங்க தலைவர் சேம நாராயணன் கோரிக்கை விடுத்தார். தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின், மாநில செயற்குழு கூட்டம், தி.நகர் சர்.பி.டி., தியாகராயர் கலை அரங்கில் நேற்று நடந்தது. இதில் மண்பாண்ட தொழிலாளர்கள் முன்னேற்றத்திற்கான, 13 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது குறித்து சங்கத்தின் மாநில தலைவர் சேம நாராயணன் பேசியதாவது: மழை, வெள்ளக் காலத்தில் மண்பாண்டங்கள் மற்றும் மூல பொருட்கள் பாதிக்கப்படுகின்றன. அவற்றை பாதுகாக்க, மண்பாண்ட தொழிலாளர்கள் வசிக்கும் கிராமங் களில், பாதுகாப்பு கிடங்கு அமைத்து தர வேண்டும். கோவில்களின் வெளியே, சுவாமி சிலைகள் உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களை விற்பனை செய்ய கடைகள் ஒதுக்க வேண்டும். வரும் பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்கும் பரிசு தொகுப்பில், ஒரு பானை மற்றும் அடுப்பை சேர்க்க வேண்டும். அவற்றை, மண்பாண்ட தொழிலாளர்களிடம் இருந்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், கலைநுட்பத்துடன் பொருட்கள் தயாரிக்கும் வகையில், நவீன மண்பாண்ட தொழிற்பயிற்சி கல்லுாரியை, அரசு அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ