திருவொற்றியூரில் துாய்மை பணி மந்தம் பணிகளுக்கு செல்லும் பெண்கள் அதிருப்தி
திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்தில், 14 வார்டுகள் உள்ளன. இங்கு, 87,418 வீடுகளில், 3.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலானோர், வேலைக்கு செல்பவர்களாகவும், தினக்கூலிகளாகவும் உள்ளனர்.இங்கு தினசரி, 1.75 லட்சம் கிலோ மட்கும், மக்கா மற்றும் அபாயகரமான குப்பை சேகரமாகின்றன. இந்த மண்டலத்தில், சில ஆண்டுகளாக துாய்மை பணியை 'ராம்கி' நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.மாநகராட்சி ஊழியர்கள் 1,200 பேர் துாய்மை பணி மேற்கொண்ட இடத்தில், மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை மட்டுமே வைத்து, தனியார் நிறுவனம் பணிகளை மேற்கொள்கிறது.இதனால், பல இடங்களில் மதியம் 1:00 மணிக்குமேல், காலதாமதமாக வீட்டு குப்பையை சேகரிக்க, பேட்டரி வாகனங்களில் துாய்மை பணியாளர்கள் செல்லும் நிலைமை உள்ளது.இது குறித்து, இல்லதரசி ஒருவர் கூறியதாவது:முன்பெல்லாம், காலையிலேயே வீடுகளில் குப்பை சேகரிப்பு பணி முடிந்து விடும். தற்போது, மதியம் வரை, துாய்மை பணியாளரை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு பிரச்னை கிடையாது. வேலைக்கு செல்வோரின் நிலைமை தான் மோசம். வேறு வழியின்றி, குப்பையை மூட்டையாக கட்டி, குப்பை தொட்டி இருந்த இடங்கள், ரயில்வே தண்டவாளங்கள், நீர்நிலைகளில் வீசி செல்கின்றனர். நிச்சயம் ஊழியர் எண்ணிக்கை அதிகரிக்கபட வேண்டும். குப்பை தொட்டி இல்லாமை என்ற நிலையில் தோல்வி ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பை தொட்டி வைக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
விடுப்பு கூட கிடைப்பதில்லை
துாய்மை பணியாளர்கள் கூறியதாவது:பணி பளு அதிகரித்துள்ளது. 250 வீட்டிற்கு ஒரு துாய்மை பணியாளர் என்றிருந்த நிலையில், தற்போது, அது இரண்டரை மடங்காக மாறி விட்டது. மேலும், குப்பை தொட்டி இல்லாத இடங்களில், வீசப்படும் குப்பையும் தரம் பிரிக்க வேண்டியிருப்பதால், வீடுகளில் குப்பை சேகரிக்கும் பணியில் தொய்வு ஏற்படுகிறது. இதற்கு, ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். தற்போதைய ஊழியர்களுக்கு வார விடுமுறை கூட வழங்குவதில்லை. உடல் நிலை சரியில்லை என்றாலும், பணியை தொடர வேண்டிய நிலை உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.