கோவை;கோவையில் நடைபெறும் லோக்சபா தேர்தலுக்கு, மூன்று இயந்திரங்கள் தேவைப்படுவதால், திண்டுக்கல்லில் இருந்து, 1,000 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தருவிக்கப்படுகின்றன.கோவை மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் வருகின்றன. லோக்சபா தேர்தலுக்கு, 3,095 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. 37 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், கூடுதலாக இரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவை. இதேபோல், நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் தொகுதியில், 16 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், கூடுதலாக ஒரு இயந்திரம் தேவை.இதற்காக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, துணை குலுக்கல் நடத்தப்பட்டது.மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார், டி.ஆர்.ஓ., ஷர்மிளா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தில்வடிவு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின், தெற்கு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில், 3,433 இயந்திரங்கள் இருப்பில் இருந்தன. மேட்டுப்பாளையத்துக்கு 388, சூலுாருக்கு 796, கோவை வடக்கிற்கு 720, கோவை தெற்கிற்கு 606, சிங்காநல்லுாருக்கு 780 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டன.143 இயந்திரங்கள் மட்டுமே மீதமிருக்கின்றன. ஆனால், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு இன்னும், 1,052 இயந்திரங்கள் தேவை. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து, 1,000 இயந்திரங்கள் தருவிக்கப்படுகின்றன. பார்வையாளர் ஆய்வு
கோவை ஜி.சி.டி., கல்லுாரியில் ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டசபை தொகுதி வாரியாக 'ஸ்ட்ராங் ரூம்'கள், 'சிசி டிவி' கேமரா கண்காணிப்பு, செய்தியாளர்கள் அறை ஆகியவற்றை, போலீஸ் பார்வையாளர் மனோஜ்குமார் நேற்று ஆய்வு செய்தார். ஏற்பாடுகள் தொடர்பாக, கலெக்டர் விளக்கினார்.
'பெல்' இன்ஜினியர்கள் பயிற்சி
தேர்தல் பிரிவினர் கூறுகையில், 'மூன்று மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, கன்ட்ரோல் யூனிட் டுடன் இணைக்க வேண்டும். முந்தைய தேர்தல்களில் இதுபோல் பணியாற்றியதில்லை. எவ்வாறு இணைப்பு கொடுப்பது என, தேர்தல் பணியாளர்களுக்கு தெரியாது. பயிற்சி அளிக்க, 'பெல்' இன்ஜினியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வந்ததும் தேர்தல் பணியாளர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கப்படும்' என்றனர்.