| ADDED : ஜூன் 19, 2024 02:25 AM
கோவை,:கோவை, காந்திபுரம், 100 அடி ரோட்டின், இரு புறங்களிலும் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பாதாள சாக்கடை தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளது.சாக்கடை மூடிகள் மிகவும் சேதமடைந்திருந்ததால், புதிய மூடிகள் பொருத்த முடிவு செய்திருந்தனர். இதன் காரணமாக, ஒரு வாரத்துக்கும் மேலாக சாக்கடை குழிகள் மூடப்படாமல் இருந்துள்ளன. அந்த பகுதி மக்களும், வணிக நிறுவனத்தினரும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகாரளித்துள்ளனர்.ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், அலட்சியமாக இருந்துள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம், ஒரு பெண் மூடப்படாமல் இருந்த குழிக்குள் தவறி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். காலில் பலத்த காயமடைந்த அந்த பெண், சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் விழுந்த பாதாள சாக்கடை குழி மூடப்பட்டது. இந்நிலையில், பணியை முறையாக மேற்கொள்ளாத ஒப்பந்ததாரருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்து, மாநகராட்சி கமிஷனர் உத்தர விட்டார். தொடர்ந்து மாநகராட்சியின், 48 வார்டு உதவி இன்ஜினியர் முருகேசனிடம் விளக்கம் கேட்டு 'மெமோ' அனுப்பியுள்ளார்.