| ADDED : ஆக 16, 2024 12:13 AM
கோவை : சுதந்திர தினத்தையொட்டி மாநகர் மாவட்ட பா.ஜ., வினர் நேற்று நுாற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் தேசிய கொடியுடன்பேரணி நடத்தினர்.நாடு முழுவதும், 78வது சுதந்திர தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.,வினர் தேசிய கொடியை ஏந்தி ஊர்வலமாக செல்வதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், கோர்ட்டில் அனுமதி பெற்று நேற்று பேரணி நடத்தினர்.சிங்காநல்லுார், செல்லாண்டியம்மன் கோவில் அருகே துவங்கிய இரு சக்கர வாகன பேரணியில் நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் தேசிய கொடியை கட்டிக்கொண்டும், பா.ஜ., தொண்டர்கள் கைகளில் ஏந்தியவாறும்'வந்தே மாதரம்' என முழக்கமிட்டவாறு சென்றனர்.பேரணியை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் துவக்கிவைத்தார்.வரதராஜபுரம், உப்பிலிபாளையம், சவுரிபாளையம் சென்று பீளமேடுபுதுாரில் நிறைவடைந்தது. வழிநெடுகிலும் பா.ஜ., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக, மாநில பொருளாளர் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் பாலாஜி உத்தமராமசாமி, மாநில பொது செயலாளர் முருகானந்தம், தேசிய செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், இளைஞரணி மாவட்ட தலைவர் கிருஷ்ண பிரசாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.