உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயன்பாட்டுக்கு வந்தது ஆத்துப்பாலம் - உக்கடம்  மேம்பாலம் 

பயன்பாட்டுக்கு வந்தது ஆத்துப்பாலம் - உக்கடம்  மேம்பாலம் 

கோவை;ஆத்துப்பாலம் - உக்கடம் இடையே, ரூ.481 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நான்கு வழி உயர்மட்ட மேம்பாலத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.கோவை உக்கடம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி, பல்லடம் சாலையில் ஆத்துப்பாலம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, உக்கடம்-- ஆத்துப்பாலம் இடையே ரூ.481 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் மொத்த கட்டுமான நீளம் 3.8 கி.மீ., மொத்த தூண்களின் எண்ணிக்கை 125. பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், ஆத்துப்பாலத்தில் இருந்து உக்கடம் சந்திப்பு மற்றும் ஒப்பணக்கார வீதி வரை வரும் வகையில், இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் செல்ல, உக்கடம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஏறுதளமும்; ஆத்துப்பாலம் அருகே பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை ஆகிய பகுதிகளில் ஏறுதளம், இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உக்கடம் நோக்கி வரும் வாகனங்கள், உக்கடம்--சுங்கம் சாலையில் இறங்குவதற்கான இறங்குதளம் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. இந்த மேம்பாலத்தின் நீளம் 2.4 கி.மீ., உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் செல்லும் வழியில் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடுக்கான சாலை (லேன்) பிரியும் இடத்தில் ஒரு ஜீப்ரா கிராசிங்; ஆத்துப்பாலத்தில் இருந்து உக்கடம் வரும் வழியில் ஒப்பணக்கார வீதி மற்றும் உக்கடம் சுங்கம் சாலைக்கான லேன் பிரியும் இடத்தில், ஒரு ஜீப்ரா கிராசிங் அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் திறந்து வைத்தார்

மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேம்பாலத்துக்கான கல்வெட்டைத் திறந்து வைத்த முதல்வர், சிறிது தூரம் மேம்பாலத்தில் நடந்து சென்று இருபுறமும் நின்றிருந்த மக்களைப் பார்த்து கையசைத்தார்.தொடர்ந்து, தனது வாகனத்தில் மேம்பாலத்தில் காரில் ஆத்துப்பாலம் சென்று, மீண்டும் அங்கிருந்து மேம்பாலம் வழியாக ஒப்பணக்கார வீதி வரை பயணித்தார்.முதல்வரின் வாகனம், மேம்பாலத்தின் இரு வழிகளையும் 8 நிமிடங்களில் கடந்தது. முதல்வர் சென்ற பின், பொதுமக்களின் வாகனங்களும் மேம்பாலத்தில் அனுமதிக்கப்பட்டன.திறப்பு விழாவில், அமைச்சர்கள் வேலு, பொன்முடி, முத்துசாமி, கீதா ஜீவன், மகேஸ், தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா, கலெக்டர் கிராந்திகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை