அரசு மருத்துவமனை ஊழியர்களை சிறை பிடித்த சென்னை போலீசார்
கோவை;முதல்வரை காண சென்னைச் சென்ற கோவை அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்களை, சென்னை போலீசார் சிறைப்பிடித்தனர்.கோவை அரசு மருத்துவமனையில், தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளிகள், துாய்மை பணியாளர்கள் மருத்துவமனை ஊழியர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்கள், கடந்த சில மாதங்களாக தங்களுக்கு வர வேண்டிய அரியர் பணத்தை உடனே வழங்க வேண்டும், தங்களை தரக்குறைவாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மரியாதையாக நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து, தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காண, முதல்வரை சந்திப்பதென முடிவு செய்து, 45 பெண்களும், 10 ஆண்களும் சென்னை புறப்பட்டு சென்றனர்.நேற்று காலை தலைமை செயலகத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். முன் அனுமதியின்றி கூடியதால், ஆலந்துாரில் உள்ள மண்டபத்திற்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். கோரிக்கைகளை மனுவாக எழுதி வாங்கியபின், மாலையில் விடுவித்தனர்.