| ADDED : மே 26, 2024 11:10 PM
பொள்ளாச்சி;சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில், அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுகிறது. தரமற்ற பைப் பயன்பாட்டால், இதற்கு தீர்வு எட்டப்படாமல் உள்ளது.சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு அம்பராம்பாளையம் ஆற்றில் இருந்து, கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் எடுத்துவரப்பட்டு, மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.இதற்காக மேல்நிலை நீர்த்தொட்டி அமைக்கப்பட்டு, வீடுகள்தோறும், குழாய் இணைப்பு வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அவ்வகையில், குழாயில் தண்ணீர் செல்லும் போது, அதன் அழுத்தம் காரணமாக குழாய் உடைப்பு ஏற்படும் என்பதால், குறிப்பிட சில இடங்களில் 'ஏர் வால்வு' அமைக்கப்பட்டுள்ளது.இருப்பினும், பல பகுதிகளில், அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு, அதை சீரமைக்க சாலையில் பள்ளம் தோண்ட வேண்டியுள்ளது.அவ்வாறு, குழாய் இணைப்பை சீரமைத்தாலும், அதற்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பி.வி.சி., பைப் குறைந்த விலையில் தரமில்லாாமல் பயன்படுத்துவதாக புகார் எழுகிறது.மக்கள் கூறியதாவது: பெரும்பாலான வார்டுகளில், குழாய் உடைப்பு எப்போதாவது ஒரு முறை நடந்தால் பரவாயில்லை. அடிக்கடி நடக்கிறது.குழாய் உடைப்பு ஏற்படும் போது, அந்த இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு, பணி முடிந்த பின் தார் சாலை போடுவதும் கிடையாது.அதேநேரம், மீண்டும் குழாய் உடைப்பு காரணமாக பள்ளம் தோண்டி வேலை நடக்கிறது. உடைப்பு ஏற்பட்டால் தரமான குழாய்களைக் கொண்டு, மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.