| ADDED : ஜூன் 18, 2024 12:38 AM
கோவை;''பகவான் நாமத்தை உச்சரித்தால் எம பயம் கிடையாது,'' என கோவை ராம்நகரில், அபங்க சங்கீர்த்தன ஹரிகதை நிகழ்த்திய, ரகுநாத்தாஸ் மஹராஜ் தெரிவித்தார்.'உயர்ந்த பக்தி எது' என்ற தலைப்பில், அவர் பேசியதாவது:இறை நாமத்தை உச்சரிப்பதும் உயர்ந்த பக்திதான். நாம் நமது கடமைகளைச் சரிவரச் செய்து கொண்டு, எப்போதாவது இறைநாமத்தைச் சொன்னால்கூட, அதற்கும் பலனுண்டு. மரணத் தருவாயில் மட்டும் ஹரி நாமம் சொன்னால்கூட வைகுண்டத்தில் இடமுண்டு. எங்கு ஹரிநாம சங்கீர்த்தனம் நடக்கிறதோ, அங்கு செல்ல எமதூதர்களுக்கே அனுமதி இல்லை.பகவான் நாமம் சொல்லும் சாதுக்கள் இருக்கும் ஊருக்குக் கூட, எமதூதர்கள் செல்லக்கூடாதாம். மீறிச் சென்றால், சுதர்சன சக்கரம் அங்கு வரும்.பகவான் நாமத்தை உச்சரித்தால் எம பயம் கிடையாது. இறைவனின் நாமத்தை உச்சரித்தால், நமக்கு மட்டுமல்ல, நம் முன்னோர்களையும் அது கரைசேர்க்கும்.இறைவனின் நாமத்தை ஆனந்தமாக உச்சரித்தால், பிறவியற்ற லோகமான வைகுண்டத்தில் இடம் கிடைக்கும். பிரம்ம லோகத்தில் பிறவி உண்டு. பிரம்மனுக்கே, ஆயுள் முடிந்தால் மீண்டும் பிறவியுண்டு. நல்லவனாக இருக்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் நல்லவனாக நடிக்கவாவது செய்யுங்கள். ஒரு கட்டத்தில் நல்லவனாகவே மாறி விடலாம்.சிலர் பகவான் நாமம் சொல்ல கூச்சப்படுவார்கள். கூச்சப்படாதீர்கள், சொல்லுங்கள். சொல்லச் சொல்ல, அந்த இறை நாமம் நம்மை அரவணைத்துக் கொள்ளும். இளம் தலைமுறையினர் கிடைக்கும் நேரங்களில், தயங்காமல் இறைநாமத்தைச் சொல்லுங்கள். பண்டரிபுரத்தில் விட்டலனைத் தரிசிக்க, 21 நாட்கள் யாத்திரை துவங்க உள்ளது. ஆடி ஏகாதசியில் யாத்திரை முடியும். வாய்ப்பிருப்பவர்கள், குறிப்பாக இளம் தலைமுறையினர் நடைபயண யாத்திரை மேற்கொள்ளுங்கள்.விட்டலனை நேரில் பார்க்க முடியாவிட்டாலும், அங்கு வரும் பக்தகோடிகளைப் பார்க்கும் புண்ணியம் கிடைக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.