பொள்ளாச்சி;தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், நேற்று, ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளித்து ஜனநாயக கடமை ஆற்றினார்.பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன், உடல் நலம் பாதித்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று ஓட்டுப்பதிவை முன்னிட்டு, மருத்துவமனையில் இருந்து நேராக, சொந்த ஊரான பொள்ளாச்சி திப்பம்பட்டிக்கு வந்தவர், ஓட்டுச்சாவடிக்கு சென்று, தனது ஓட்டினை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார்.அதன்பின், நிருபர்களிடம் கூறியதாவது:தலைவிரித்தாடும் கடுமையான லஞ்சம், ஊழல், விலைவாசி ஏற்றம் மக்களை பாதித்துள்ளது. மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றாத தி.மு.க.,வின் மூன்று ஆண்டு கால ஆட்சி உள்ளது.பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு, ஜி.எஸ்.டி.,யால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்பு போன்றவை காரணமாக, மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.மாநிலம் முழுக்க அ.தி.மு.க.,வுக்கு சாதகமான அலை வீசுகிறது; பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர், இரண்டு லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.இவ்வாறு, கூறினார்.